புதுச்சேரி, ஜூன் 4-டாடா மேஜிக் வாகனத்தை உடைத்து ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பிரதேச பொதுச் செயலாளர் எம்.பி.மதிவாணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-புதுச்சேரி அடுத்து வில்லியனூர் பகுதியில் டாடா மேஜிக் வாகனம் ஓட்டி வருகிறார் கோபிநாத். சம்பவத்தன்று ஐந்து இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் உலவாய்கால் கிராமம் அருகே கோபி நாத்தை வழி மறித்து, அவரையும் டாடா மேஜிக் வாகனத்தையும், அதில் பயணம் செய்த அவரது தாய் வேம்பரசியையும் கடுமையாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இத் தாக்குதலில் படுகாயம் அடைந்த கோபிநாத்தும், அவரது தாயாரும் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்தை சிஐடியு தனியார் போக்குவரத்து சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த தாக்குதல் குறித்து வில்லியனூர் காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப் பட்டுள்ளது.இதற்கு முன்பு, பத்துக்கண்ணு பகுதியில் தனியார் பேருந்து உரிமையாளரின் தூண்டுதலின் பேரில் இதுபோன்ற தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இது குறித்தும் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதற்குள்ளாக கோபிநாத்தை தாக்கியுள்ளனர். இத் தாக்குதல் சம்பவங்கள் தனியார் பேருந்து உரிமையாளர்களின் தூண்டுதலின் பேரில்தான் நடக்கிறது. எனவே, குற்றவாளிகள் மீது உரிய வழக்குப் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், டாடாமேஜிக் வாகன ‘உரிமையாளர்களின் வாழ் வாதாரத்தை வில்லியனூர் வட்டார போக்குவரத்து ஆணையரும் பாதுகாக்க வேண்டும்.போராட்டம்டாடாமேஜிக் வாகன ஓட்டுநர் கோபிநாத்திற்கும் அவரது குடும்பத்திற்கும் உரிய பாதுகாப்பு வழங்கக் கோரியும், குற்றவாளிகளை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஜூன் 7 ஆம் தேதி டாடாமேஜிக் ஓட்டுநர்கள் சங்கத்தின் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு மதிவாணன் தெரிவித்திருக்கிறார்.