புதுதில்லி:
இந்தியர் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் தலா ரூ. 15 லட்சம் போடுவேன்; ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவேன்; வறுமையை ஒழிப்பேன் என்றெல்லாம் பொய் சொல்லித்தான் 2014-ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்தார். ஆட்சிக்கு வந்தபின்னும், 60 நாட்களில் கறுப்புப் பணத்தை ஒழிக்காவிட்டால், நடு ரோட்டில் என்னை தீ வைத்துக் கொளுத்துங்கள் என்றார். ஆனால் மோடி சொன்ன - செய்த அனைத்தும் பொய்யும் மோசடிகளாகவுமே போய்விட்டன.
இப்போது ஆட்சி முடியப் போகும் தருவாயிலும், மோடி பொய்யையும் மோசடியையும் விடுவதாகவில்லை. அதற்கு உதாரணம்தான் ‘நியூஸ் நேசன்’ (சூநறள யேவiடிn) என்ற தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு மோடி வழங்கியிருக்கும் நேர்காணல் ஆகும்.குறிப்பாக, இந்த நேர்காணலில், பாலகோட் தாக்குதல் குறித்து, மோடி கூறியிருந்த விஷயங்கள், மோடியின் விஞ்ஞான அறிவை(!)யும், எல்லாம் தெரிந்தவர் போல தன்னைக் காட்டிக்கொள்வதும் அம்பலத்தில் ஏறியுள்ளன.
“பாலகோட் முகாம் தாக்குதலுக்கு திட்டமிட்டபோது, திடீரென காலநிலை மோசமாகி, மேகங்கள் கூடத் தொடங்கின; மழையும் பெய்தது. மேகங்களுக்குள் சென்று தாக்குதல் நடத்த முடியுமா? என சந்தேகம் இருந்தது. பாலகோட் தாக்குதல் திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் ஏராளமான வல்லுநர்களிடம் பேசினோம். அவர்கள் அனைவரும் என்னிடம் காலநிலையை காரணம் காட்டி தாக்குதலை ஒத்திவைக்க கோரினார்கள். நான் மறுத்து விட்டேன்.
தேதியை மாற்றினால் இரு சாதகங்களை இழந்து விடுவோம் என்று என் அறிவு(!)க்குத் தோன்றியது. ஒன்று ரகசியம். இரண்டாவது, அன்று வானிலிருந்த மேகக் கூட்டம். வானில் மேகமூட்டம் இருப்பதால் மேகங்களே நம்மை பாகிஸ்தான் நாட்டின் ரேடார் பார்வையிலிருந்து காப்பாற்றி விடும் என விமானப்படையினருக்கு ஆலோசனை கூறினேன். ஆதலால் தாமதிக்காமல் புறப்படுங்கள் என்று அறிவுறுத்தினேன்; அதன்படியே தாக்குதல் நடத்தி இன்று வெற்றிபெற்று விட்டோம்” என்று நியூஸ் நேசன் நேர்காணலில் மோடி கூறியது விஞ்ஞானிகள் மத்தியில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
பாஜக தலைவர்களுக்குத்தான் அறிவியல் பற்றி ஒன்றும் தெரியாது என்றால், நாட்டில் உள்ளவர்களுக்கும் ஒன்று தெரியாது என்று நினைக்கிறார்களா? என்று அவர்கள் தங்கள் அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.“என்ன, மேகங்களால் ரேடாரை ஏமாற்ற முடியாதா? இப்படியொரு விஷயம் இருப்பது, விஞ்ஞானிகளுக்கே தெரியாதே..” என்று சமூகவலைத்தளவாசிகளும் மோடியை விட்டு வைக்கவில்லை.
“பிரதமர் சார், உங்களால் மட்டும் எப்படி முடியுது” என்றும் “ நல்லவேளை, நான்தான் விமானத்தை ஓட்டிச் சென்று தாக்குதல் நடத்தினேன்... என்று கூறவில்லையே.. அந்த அளவிற்கு நாங்கள் தப்பித்தோம்” என்றும் முகநூல், ட்விட்டர் பக்கங்களில் மோடியின் அறியாமையை கேலி செய்து, சிரித்துக் களைத்துப் போனார்கள். ‘கிளவுட் மோடி’, ‘என்டயர் கிளவுட்கவர்’ போன்ற ஹேஷ்டேக்குகளையும் ட்விட்டரில் டிரெண்ட் ஆக்கினார்கள்.
“சாதாரண ஒளி அலைகளை விட மிகவும் குறைந்த அலைநீளம் கொண்ட ரேடியோ அலைகளால் இயக்கப்படுபவைதான் ரேடார்கள். ஆகவே, மேகங்களுக்கு ஊடே செல்லும் விமானங்களை கண்டறிவதில் ரேடார்களுக்கு எந்த தடையும் ஏற்படாது. மேகங்கள் ரேடார் கண்காணிப்பிலிருந்து விமானங்களைக் காப்பாற்றும் என்பதற்கு வாய்ப்பே கிடையாது” என்று மோடி வகையறாக்களுக்கு பொறுப்புடன் விளக்கங்களையும் அளித்தனர்.
இதனிடையேதான், “1980-களிலேயே, நான் டிஜிட்டல் கேமரா மற்றும் டிஜிட்டல் பேட் வைத்திருந்தேன்” என்று பிரதமர் மோடி அவிழ்த்து விட்ட மற்றொரு பொய்யும் சர்ச்சையாகியுள்ளது. ‘நியூஸ் நேஷன்’ என்ற தொலைக்காட்சி நேர்காணலில்தான் இதையும் மோடி கூறியுள்ளார்.
“1990-களின் தொடக்கத்திலேயே நான் ‘டிஜிட்டல் பேட்’ வைத்திருந்தேன்; இப்போது அனைவரும் அதனைப் பயன்படுத்துகிறார்கள்; அதேபோல் 80-களிலேயே நான் டிஜிட்டல் கேமரா வைத்திருந்தேன்; 1987 அல்லது 88-இல் அத்வானியை டிஜிட்டல் கேமராவில் படம் பிடித்து தில்லிக்கு அந்த போட்டோவை அனுப்பினேன்; அத்வானி நான் எடுத்த அவரின் கலர் போட்டோவை பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனார்” என்பதுதான் மோடி கூறிய கதையாகும்.
இந்தியாவில் டிஜிட்டல் கேமரா, டிஜிட்டல் பேட் என்பவை 1990-களுக்குப் பின்னர் அறிமுகமாகி 2000-ஆம் ஆண்டுகளில்தான் அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களில் ஒன்றானது. ஆனால் பிரதமர் மோடி 1980களிலேயே இவற்றை தாம் வைத்திருந்ததாக கூறுவது எப்படி? என்று பலரும் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.“இளமையில் நான் மிகவும் வறுமையில் இருந்தேன்; எனது துணிகளை நானே துவைத்துக் கொள்வேன்; முழுக்கை சட்டையைவிட அரைக்கை சட்டையைத் துவைப்பது எளிதாகும்; அதனால்தான் நான் அரைக்கை சட்டைகளை மட்டுமே அணிவேன்; பாத்திரத்தில் கரித்தணலைப் போட்டு நானே இஸ்திரியும் செய்து கொள்வேன்; ஏனெனில் என்னிடம் அப்போது இஸ்திரிப் பெட்டி வாங்குவதற்கு கூட வசதி இல்லை; இவ்வாறு எனது துணிகளை நானே துவைத்துக் கொள்ளும் பழக்கத்தை குஜராத் முதல்வராகும் வரை கடைப்பிடித்தேன்; எம்.எல்.ஏ. ஆகும் வரை எனக்கு வங்கிக் கணக்கே இல்லை.. எம்.எல்.ஏ. ஆன போதுதான் கொஞ்சம் பணம் கிடைத்தது.”
- இப்படியெல்லாம் கூறியவர் மோடிதான். எப்போதோ அல்ல, கடந்த மாதம் பாலிவுட் நடிகர் அக்சய் குமாருக்கு அளித்த பேட்டியின் போதுதான், இந்த சுயபுராணங்களை எடுத்து விட்டிருந்தார்.
அப்படியிருக்க, 1980-களில், ஒரு சிலரிடம் மட்டுமே இருந்த விலை உயர்ந்த டிஜிட்டல் கேமராவை, கையில் பணமே இல்லாத மோடி எப்படி வைத்திருந்தார்? என கேள்விகளையும் இளைஞர்கள், மாணவர்கள் எழுப்பியுள்ளனர்.
அதேபோல இந்தியாவில் இ-மெயில் அறிமுகம் செய்யப்பட்டதே 1995-ல்தான் எனும்போது, அதற்கு முன்னரே ‘டிஜிட்டல் பேட்’ வைத்திருந்தேன் என்று மோடி கூறுவது எப்படி? என்றும் கேட்டுள்ளனர்.
சமூகவலைத்தளவாசி ஒருவர், “மோடி இ- மெயிலை முதன் முதலில் யாருக்கு அனுப்பினார்? மோடியின் இ- மெயில் ஐடி என்ன? என்று கேட்டுவிட்டு, மோடி பாணியிலேயே ‘டீ ஸ்டாலா?’ என்று கிண்டலடித்துள்ளார்.
பதவியை இழப்பதற்குள் இன்னும் என்னென்ன கதைகளெல்லாம் மோடியிடமிருந்து வருமோ, தெரியவில்லை.