tamilnadu

img

மே 17-ஆம் தேதியோடு மாயமானது நமோ டி.வி.

புதுதில்லி:

‘நமோ டிவி’ என்ற தொலைக்காட்சியை, கடந்த மார்ச் 27-ஆம் தேதி திடீரென பாஜக தொடங்கியது. உடனடியாக, இந்த சேனல், ஏர்டெல், டாடா ஸ்கை,டிஷ் டிவி, டி2எச் போன்ற பல முன்னணிடிடிஎச் சேவைகளிலும் ஒளிபரப்பப்பட்டது.


பிரதமர் மோடியின் பிரச்சாரத்துக்காக தொடங்கப்பட்ட இந்த ‘நமோ’ சேனல், இஸ்ரோவின் என்எஸ்எஸ்-6 வகை செயற்கைக்கோள் மூலம் ஒளிபரப்பானது. ஆனால், அதற்கான எந்த அனுமதியையும் பெறாமலேயே, செயற்கைக்கோளின் அப்லிங், டவுன்லிங்க் சிக்னல்களை நமோ டிவி பயன்படுத்தியது.தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகு, இவ்வாறு ஒரு டி.வி. ஆரம்பிக்கமுடியுமா? இதற்கு யார் அனுமதி அளித்தது; இதனைப் பற்றி தேர்தல் ஆணையத்திற்கு ஏதாவது தெரியுமா? என்று எதிர்க்கட்சிகள் கேள்விக் கணைகளைத் தொடுத்தன. அப்போது, ‘நமோடிவி’க்கு உரிமம் அளிக்கப்படவில்லை’ என்றும், ‘ஏனெனில் அது ஒருடி.வி. சேனலே இல்லை’ என்றும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் பதிலளித்தது. 


ஆனால் நமோ டி.வி. மீது எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், நமோ டி.வி. தேர்தல் விதிமுறைகளுக்கு மாறாக, எந்தத் தடையும் இல்லாமல் தொடர்ந்து 24 மணிநேரமும் நரேந்திர மோடியின் பேச்சுகளை ஒளிபரப்பி வந்தது. பிரச்சாரம் நிறைவடைவதற்கு சிலநாட்களுக்கு முன்புதான், நமோ டி.வி.தனது நிகழ்ச்சிகளை, எங்களின் ஒப்புதலுக்குப் பிறகே ஒளிபரப்ப வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.ஆனால், இந்த கண்துடைப்பு நோட்டீஸ் அனுப்பப்பட்ட ஒருவாரத் தில், கடந்த மே 17-ஆம் தேதியோடு, மக்களவைத் தேர்தல் பிரச்சாரமே முடிந்து விட்டது. நமோ டி.வி.யும் சத்தமில்லாமல் கடையை இழுத்து மூடி, மாயமாகி விட்டது.