tamilnadu

img

புதுவையில் மாணவர்களை சிறைவைத்து நடைபெற்ற பட்டமளிப்பு விழா

புதுச்சேரி, பிப். 26- புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டத்திற்கிடையே பட்டமளிப்பு விழா நடைபெற்றது. புதுச்சேரி மாணவர்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும், கல்விக் கட்டண உயர்வை திரும்பப்பெற வேண்டும், பல ஆண்டுகாளமாக இயக்கப்பட்டு வந்த இலவச பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  மாணவர் பேரவை சார்பில் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 20 நாட்காளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் மாணவர்களை வலுகட்டாயமாக கைது செய்து,  பல்கலைக்கழக விடுதிகளில்  துணை ராணுவ கண்காணிப்புடன் பட்டமளிப்பு விழா நடைபெறும் வரை சிறை வைக்கப்பட்டிருந்தனர். பலத்த கெடுபிடிகளுக்கிடையே 28ஆவது பட்டமளிப்புவிழா பல்கலைக்கழக வளாகத்தில் உளள ஜவஹர்லால் அரங்கில் புதனன்று (பிப். 26) நடைபெற்றது. இதில் குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கையநாயுடு கலந்துகொண்டு பட்டங்கள் வழங்கி பேசினார். இவிழாவில் புதுச்சேரி முதல்வர் நாரயாணசாமி, துணைநிலை  ஆளுநர்கிரண்பேடி, அமைச்சர் ஷாஜகான், மாநிலங்களவை உறுப்பினர் கோகுலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக துணைவேந்தர் குர்மீத்சிங் வரவேற்றார். பல்கலைக்கழக வாயில்களில் பட்டம் பெற வந்த மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் சோதனை செய்த பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.