பவ்நகர்:
குஜராத்தில் பவ்நகர் மாவட்டத்தில் கோகா மற்றும் சூரத் நகருக்கு அருகே அமைந்த ஹசீரா ஆகிய நகரங்களுக்கு இடையே படகு போக்குவரத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வழியே ஞாயிறன்று தொடங்கி வைத்தார். இதில் மாநில முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், கப்பல் துறை அமைச்சகத்தின் பெயர் இனி துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் என்று பெயர் மாற்றம் செய்யப்படுகிறது என அறிவித்தார்.
கப்பல் போக்குவரத்து அமைச்சகம் என்பது , கப்பல் கட்டுமானம், கப்பல் புனரமைப்பு, முக்கிய துறைமுகங்கள், தேசிய நீர்வழி போக்குவரத்து மற்றும் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து ஆகியவற்றை உள்ளடக்கிய கப்பல் போக்குவரத்து மற்றும் துறைமுக பிரிவுகளை கொண்டது. ஏற்கனவே மத்திய மனிதவளம் மற்றும் மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரை கடந்த ஜூலை மாதத்தில் கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.