“பசியோடு வந்தவரை பார்க்கவும் நேரீர்” - என்பார் வள்ளலார் பசிக்கொடுமை தீர்க்க மணிமேகலை காவியத்தின் நாயகி அட்சயப் பாத்திரம் கொண்டு பசி போக்கியதாகவும் “காணார், கேளார், கால்முடக்கப்பட்டோர், பேணுனர் இல்லோர்” - என விளிம்புநிலை மக்களுக்கு உணவளித்ததாக பாடுவார் சீத்தலைச் சாத்தனார். அன்றைய அட்சயப் பாத்திரத்தின் இன்றைய வடிவாய் மதுரை மாவட்ட மக்களுக்கு கிடைத்ததுதான் மாமதுரை அன்னவாசல் திட்டம். மே முதல் நாள் உழைப்பாளர் தினத்தன்று இந்தத் திட்டம் துவங்கப்பட்டது. ஜுன் 2ம்தேதியுடன் 33 நாட்களை எட்டியுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை ஒன்றரை லட்சம் வேளை உணவு வழங்கப்பட்டுள்ளது.
வயிற்று நெருப்பை அணைப்பதற்காக மாவட்டம் முழுவதும் 17 சமையல் கூட அடுப்புகளில் அன்றாடம் நெருப்பு எரிந்தது. அன்றாடம் தயாரான உணவுகளை பசித்த மானிடத்துக்கு கொண்டு சேர்க்க 416 செயற்பாட்டாளர்கள் தேனீக்கள் போல பறந்து கொண்டே இருந்தனர். இதில் பெருமபாலானவர்கள் இளைஞர்கள், இந்தத் திட்டத்தால் ஈர்க்கப்பட்டவர்கள். ஒரு மக்கள் பிரதிநிதி என்ற முறையில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், “எளிய மனிதர்களுக்கான நம் அனைவரின் கூட்டு முயற்சி” என்ற முழக்கத்துடன் துவங்கப்பட்ட இந்தத் திட்டம் சமூகத்தின் பல்வேறு தரப்பினரை ஈர்த்தது. சமூகக் காதல் உள்ளவரும், நேசமிக்க சமூகம் உருவாக வேண்டும் என்ற நோக்கம் கொண்டவருமான திரைக்கலைஞர் சூர்யா தம்முடைய அகரம் அக்கட்டளையின் வாயிலாக ரூபாய் 5லட்சத்தை அள்ளித் தந்தார்.
லட்சக்கணக்கானோருக்கு கண்ணொளி வழங்கிய தமிழகத்தின் அடையாளமாக விளங்குகிற மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையின் முதுநிலை மருத்துவம் படித்து வரும் மருத்துவர்கள் தங்களுக்கு கிடைத்த உதவித்தொகையிலிருந்து ரூ.1 லட்சத்தை அன்னவாசல் திட்டத்திற்கு வழங்கினர். ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு சமூக நலத்திட்டத்திற்கு தங்கள் உதவித்தொகையின் ஒரு பகுதியை ஊக்கத்தொகையாக்கி வழங்கி வருகின்றனர் இந்த கண்ணொளி காவலர்கள். சுகுணா பிராய்லர்ஸ் நிறுவனம் மாமதுரையின் அன்னவாசல் திட்டத்தை மேலும் அர்த்தமுள்ளதாக்க 21ஆயிரம் முட்டைகளை வழங்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக்குழுக்கள் இணைந்து 4ஆயிரம் முட்டைகளை வழங்கிய நிலையில் 25ஆயிரம் முட்டைகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மதுரை சமயநல்லூரில் அன்னவாசல் திட்டத்தின் தொண்டராக பணியாற்றிய வீரகுமார் தன்னுடைய திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த தொகையை இந்தத் திட்டத்திற்கு வழங்கியதோடு வீரகுமார் -ராதிகா தம்பதியினர் பயனாளிகளுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கி தங்கள் திருமண விழாவை கொண்டாடினர். இப்படி நெகிழ்ச்சியூட்டும் நிகழ்ச்சிகள் பலஇந்தத் திட்டத்தின் பின்னணியில் நடந்தேறியுள்ளனர். இந்தத் திட்டத்தில் பெரும்பாலும் பலன்பெற்றவர்கள் முதியவர்கள், தனித்துவிடப்பட்டவர்கள், சாலையோரங்களில் மனிதத்தின் கருணைக்காக ஏங்கி நிற்பவர்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர்கள், மனநலம் குன்றியோர் என அனைவருமே சமூகத்தின் விளிம்புநிலை மக்கள் ஆவர்.
பல்வேறு ஏடுகளும், ஊடகங்களும் இந்தத் திட்டத்தை வரவேற்று பாராட்டியுள்ளன. மதுரை மக்கள் நியூஸ் எனும் யூ டியூப் சேனல் குறும்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது. மொத்தத்தில் அன்னவாசல் திட்டம் என்பது உணவளிக்கிற திட்டமாக மட்டுமின்றி நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களுக்கு, தொண்டர்களுக்கு உணர்வளிக்கிற திட்டமாகவும், தொண்டறம் எனும் தூய அறத்தை முன்னிறுத்தும் அனுபவப் பாடமாக அமைந்துள்ளது. பசியாறிய வயிறுகளின் நிம்மதிதான் இந்தத் திட்டத்தின் வெற்றி.