tamilnadu

img

இந்தியைக் கட்டாயமாக்குவதே மத்திய அரசின் நோக்கம்

விருதுநகர், ஜூன் 5-மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை மாநில அரசின் உரிமையைப் பறிப்பதாக உள்ளது என மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்தார்.  விருதுநகரில் புதனன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-மத்திய அரசு  இந்தி மொழித் திணிப்பி லிருந்து பின்வாங்கிவிட்டது எனக் கூற முடியாது.   மாநில அரசின் கல்வி உரிமையைப் பறிப்பது, இந்தி மொழியை கட்டாயமாக்குவது, கல்வியை தனியார்மயமாக்குவது இவை மூன்றும் சேர்ந்தது தான் புதிய கல்விக் கொள்கை. தமிழக மக்கள் ஒற்றுமையுடன் எதிர்த்த காரணத்தால் தற்போது பாஜக அரசு பின்வாங்கியுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஒருமித்த கருத்துள்ள ஏராளமான மக்களவை உறுப்பி னர்கள் தற்போது உள்ளனர். தமிழகத்தின் நலனை மத்திய அரசு புறக்கணித்தால்,  அனைவரும் ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வெற்றி பெறுவோம்.  மக்களைத் திரட்டிப் போராடியும் வெற்றி பெறுவோம்.  இவ்வாறு அவர் கூறினார்.ஜி.எஸ்.டி வரி அதிகளவில் தமிழகத்தி லிருந்து மத்திய அரசுக்கு செல்கிறது. ஆனால், அதன் பங்குத் தொகை கிடைக்கவில்லையே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, இதுகுறித்து நாடாளுமன்றத் தேர்தலின் போது விரிவான முறையில் பிரச்சாரம் செய்தோம். தற்போது, தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நிதியைப் பெறுவோம் என்றார். சிவகங்கை மாவட்டம்  கீழடி, மதுரை, திருவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு ஆகியபகுதிகளில் கிடைக்கக் கூடிய  அரிய  பொருட்களைப் பார்க்கும்போது தமிழர்களின் நாகரீகம் மிகவும் தொன்மையான நாகரீகம் என்பது தெரிய வருகிறது. இதுகுறித்து மத்திய-மாநில அரசுகளின் தொல்லியல் துறைகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று தமிழர்களின் பெருமையை உலகறியச் செய்வோம் என்றும் அவர் கூறினார். இந்தச் சந்திப்பின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன், மாநி லக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன் உட்பட பலர் உடனிருந்தனர்.