சென்னை,பிப்.14- தமிழக அரசின் பட்ஜெட் குறித்து சட்டப்பேரவை வளாகத்திற்கு வெளியில் எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டி அளித்தார். அப்போது,“திமுக ஆட்சியிலிருந்த 2011 ஆம் ஆண்டு வரை ரூ. 1 லட்சம் கோடியாக இருந்த தமிழ்நாட்டின் கடன்சுமை, அதிமுக அரசு பதவியேற்று 10 ஆண்டுகளுக்குள் ரூ.4 லட்சம் கோடியாகி 3 மடங்கு அதிகரித்திருப்பதைத் தான் இந்த பட்ஜெட் எடுத்துக் காட்டுகிறது” என்றார். இந்த பட்ஜெட் யாருக்கும் பத்தாத, எதற்கும் பத்தாத பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது. இது இந்த ஆட்சியின் கடைசி நிதிநிலை அறிக்கை என்பதை தெளிவாக எடுத்துக் காட்டி உள்ளனர். இந்த ஆட்சியைப் பொறுத்தவரை பட்ஜெட்டில் நிதிப் பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை, கடன் சுமை போன்றவைதான் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடன் சுமையைப் பொறுத்தவரை 4 லட்சத்து 56 ஆயிரத்து 660 கோடி ரூபாய் எனக் குறிப்பிடப்பட் டிருக்கிறது என்றும் அவர் கூறினார்.
அரசுப் பணியாளர் முதல் தேர்வாணையம் வரை, தலைமைச் செயலகம் முதல் கிராம நிர்வாகம் வரை, கடனில்தான் முழுமையாக மூழ்கி இருக்கிறது. கடனில் மட்டும் அல்ல மோசடியில், ஊழலில், லஞ்சம் வாங்குவதில் இந்த அரசு முழுமையாக மூழ்கி இருக்கிறது. இந்த நிதி நிலை அறிக்கையைப் பொறுத்தவரை தொலைநோக்குத் திட்டங்களும் இல்லை, வளர்ச்சித் திட்டங்களும் இல்லை. நிதிநிலை அறிக்கையைப் பொறுத்தவரை முதலமைச்சர் எடப்பாடி, வேலுமணி, தங்கமணி ஆகியோரின் துறைகளுக்கு மட்டுமே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது எதற்கு என்பது மர்மமாக இருக்கிறது. ஆனால், அது மக்களுக்குத் தெளிவாகப் புரியும். இதுதான் இன்றைக்கு உள்ள நிலை என்றும் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த அவர்,“11 எம்எல்ஏக்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. பேரவைத் தலைவர் தனபால் நல்ல தீர்ப்பு சொல்வார் என எதிர்பார்க்கிறோம். அவர் அறிவிப்பது நல்லதாக கூட இருக்கலாம் அல்லவா? என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். வளர்ச்சி அல்ல அதிர்ச்சி: தொல். திருமா.
தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் பட்ஜெட் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்பி., வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இது அடித்தட்டு மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கிற பட்ஜெட் என்றும் பற்றாக்குறையை சமாளிக்க சுமார் ரூ. 60,000 கோடி புதிய கடன்களை பெறப் போவதாக தமிழக அரசு கூறியிருக்கிறது. அதன் மூலம் தமிழக அரசின் கடன் நாலரை லட்சம் கோடியைத் தாண்டும் என்று தெரிகிறது. இது அதிர்ச்சி அளிக்கிறது” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். ஆதிதிராவிட, பழங்குடியின மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய சிறப்புக்கூறுகள் திட்ட நிதி முறையாக இந்த ஆண்டும் ஒதுக்கப்படவில்லை . ஆதிதிராவிட மாணவர்களின் உயர்கல்வி கனவைக் கருகச்செய்யும் விதமாக, போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்துக்கான நிதியை கணிசமாகத் தமிழக அரசு குறைத்துள்ளது. இந்த ஆண்டும் அது உயர்த்தப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியிருக்கிறார்.