tamilnadu

img

பதவியேற்ற மூன்றே நாளில் பீகார் கல்வியமைச்சர் ராஜினாமா...

பாட்னா:
ஊழல் குற்றச்சாட்டில் தொடர்புடைய மேவாலால் சவுதாரி, பதவியேற்ற மூன்றே நாட்களில் பீகாரின் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

பாஜக ஆதரவுடன் முதல்வர் ஆன நிதிஷ்குமார் மற்றும் அவரது ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்கு முதல் அடியாக, மேவாலால் சவுதாரியின் ராஜினாமா அமைந்துள்ளது.கடந்த 2017-ஆம் ஆண்டு காலக்கட்டத்தில், பகல்பூர் வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த மேவாலால் சவுதாரிதான், நவம்பர்16-ஆம் தேதி பீகாரின் கல்வி யமைச்சராக பதவியேற்றார். 

பல்கலைக்கழக துணை வேந்தராக இருந்தபோதே கடுமையான ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் சவுதாரி. குறிப்பாக, 2010 மற்றும் 2015-க்கு இடையில் சவுதாரி துணைவேந் தர் பதவியில் இருந்தபோது, வேளாண் பல்கலைக்கழகத்தில் 167 உதவிப் பேராசிரியர்கள் மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர்களை நியமித்ததில் பலகோடி ரூபாய் அளவிற்குமுறைகேடு செய்ததாக குற்றச் சாட்டு இருந்தது. அத்துடன், பல்கலைக்கழகத்துக்கு புதிய கட்டடம் கட்டியதிலும் சவுதாரி  ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருந்தார்.சவுதாரி மீது வழக்கு தொடர, அன்றைய ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, மொத்தம் 50 பேர் மீது ஐபிசி 409, 420, 467, 468, 471 மற்றும் 120 பி ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.தன் மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதை, சவுதாரியும், பீகார்சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தாராப்பூர் தொகுதி வேட்புமனு தாக்கலுக்கான பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்து இருந்தார். அன்றே இது சர்ச்சையானது.இந்நிலையில், ஜேடியு சார்பில் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்ட மேவாலால் சவுதாரி, கல்வி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டது அந்த சர்ச்சையை அதிகப்படுத்தியது. அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று வலுவான கோரிக்கைகள் எழுந்தன. போராட்டங்கள் நடத்தப் போவதாகவும் எதிர்க்கட்சிகள் அறிவித்தன.

முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதாதளம் மட்டுமன்றி, கூட்டணியில் இருக்கும் பாஜகவும் இவ்விஷயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி நிதிஷ்குமாருக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தது. இதையடுத்து, நிதிஷ்குமார் புதனன்று சவுதாரியை நேரில் அழைத்து நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போதே, மேவாலால் சவுதாரி, அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்படலாம் அல்லது அவராகவே பதவியை ராஜினாமா செய்யலாம் என்று எதிர்பார்க்கப் பட்டது. இந்நிலையில், வியாழனன்று சவுதாரி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள் ளார்.

;