1886 - லினோடைப் எந்திரத்தின்மூலம் அச்சிடப்பட்ட முதல் செய்தித்தாளாக நியூயார்க் டிரிப்யூன் வெளியாகியது. 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிவரைகூட நாம் அச்சகங்களில் பார்த்திருக்கக்கூடிய, எழுத்துக்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கோக்கும் முறையில்தான் அதுவரை செய்தித்தாள்கள் வெளியாகிக்கொண்டிருந்தன. அக்காலத்தில், மேல் வரிசைப் பெட்டிகளில் கேப்பிடல் எழுத்துகளும், கீழ்வரிசைப் பெட்டிகளில் சிறிய எழுத்துகளும் இருக்கும். அதனாலேயே அப்பர்கேஸ்(மேல் பெட்டி!), லோயர்கேஸ்(கீழ்ப்பெட்டி!) என்று குறிப்பிடும் முறை உருவானது! 1566இல் வெனிசில் கையெழுத்துப் பிரதியாக முதல் செய்தித்தாள் வெளியாகியது. முதல் அச்சிடப்பட்ட செய்தித்தாள் 1605இல் ஜெர்மனியில் வெளியாகியது (இத்தொடரில் 2018 நவம்பர் 7இல்). அச்சிடும் தொழில்நுட்பங்களில் பெரும் முன்னேற்றங்கள் ஏற்பட்ட 1800கள்தான் நவீன செய்தித்தாள்களின் தொடக்கமாகும். 1814இல் தி டைம்ஸ் இதழ், ஒரு மணிநேரத்திற்கு 1,100 பிரதிகள் அச்சிடும் எந்திரத்தை வாங்கியது மிகப்பெரிய முன்னேற்றமாகக் கருதப்பட்டது. அமெரிக்காவில் குடியேறிய ஜெர்மானியரான வோட்மார் மெர்ஜென்த்தாலெர் சூடான உலோகத் தகட்டில் எழுத்துகளை பதித்து அச்சிடும் லினோடைப் முறையை உருவாக்கினார். நீதிமன்ற நடவடிக்கைகளை ஆவணப்படுத்தும் பணியிலிருந்த ஜேம்ஸ் க்ளஃபேன், அதற்கு உதவியாக ஒரு தட்டச்சு எந்திரத்தையும் உருவாக்கியிருந்தார். இவர் 1876இல், மெர்ஜென்த்தாலரை அணுகியபோது, அத்தட்டச்சு எந்திரத்திலிருந்த குறைகளை மெர்ஜென்த்தாலர் கண்டுபிடித்து சரிசெய்தார். நீதிமன்ற ஆவணங்களை இன்னும் விரைவாக அச்சிட ஒரு கருவி தேவையென்று கருதிய க்ளஃபேனின் தூண்டுதலில்தான், லினோடைப் எந்திரத்தை மெர்ஜென்த்தாலெர் உருவாக்கியதால், லினோடைப் எந்திரத்தின் தந்தை என்று க்ளஃபேன் குறிப்பிடப்படுகிறார். விசைப்பலகையின்மூலம் உள்ளிடப்பட்டு, ஒரே நேரத்தில் வரி முழுவதையும் (லைன்-ஓ-டைப்) அச்சிடும் லினோடைப் எந்திரம் மிகப்பெரிய முன்னேற்றமாக இருந்ததுடன், அடுத்த நூறாண்டுகளுக்கு செய்தித்தாள் அச்சிடுவதற்கான முதன்மையான முறையாகவும் விளங்கியதால், இரண்டாம் கூட்டன்பர்க் என்று மெர்ஜென்த்தாலர் புகழப்படுகிறார். ஃபோட்டோ டைப்செட்டிங், ஆஃப்செட் லித்தோகிராஃபி ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டாலும் செய்தித்தாள் துறையில் 1970,80கள்வரை லினோடைப்பே கோலோச்சியது. 20ம் நூற்றாண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கணினி அச்சுக்கோப்பு, மற்ற அனைத்துத் தொழில்நுட்பங்களின் பயன்பாட்டையுமே இன்று முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது.