கோவை, ஏப்.26- தமிழ்நாடு, கேரளாவில் இருந்து 113 பேர் கோவை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர். கொரோனா பரவல் தடுப்பு ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் தமிழ்நாடு, கேரளாவில் பல்வேறு பகுதிகளில் இருந்த இலங்கையை சேர்ந்த 113 பேர் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். அவர்களை அழைத்துச்செல்ல ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் தனி விமானம் கோவை விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்த 113 பேர் பேருந்து மூலம் கோவை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இதையடுத்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 113 பேரும் இலங்கை தலைநகர் கொழும்பிற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.