tamilnadu

img

குழந்தைகள் விற்பனை விவகாரம்: 4500 பிறப்பு சான்றிதழ்கள் ஆய்வு -மேலும் ஒரு செவிலியர் கைது

சேலம்:

நாமக்கல்லை சேர்ந்த ஓய்வுபெற்ற செவிலியர் அமுதா குழந்தைகளை விற்பனை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ராசிபுரம், கொல்லிமலை பகுதிகளில் கடந்த 2 ஆண்டுகளில் விநியோகிக்கப்பட்ட சுமார் 4500 பிறப்பு சான்றிதழ்கள் ஆய்வும் செய்யும் பணியை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒரு பெண் செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த செவிலியர் அமுதா, குழந்தைகளை விற்பனை செய்து வருவது தொடர்பான ஆடியோ வெளியானது. அந்த ஆடியோவில் பேசிய அமுதா, குழந்தைகளின் கலருக்கு ஏற்பவும் பெண்குழந்தை என்றால் சுமார் 3லட்சமும் ஆண் குழந்தையென்றால் சுமார் 4 லட்சம் வரையும் விலை பேசும் ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்துடன்,  70 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், குழந்தைக்கு பிறப்பு சான்றிதழ் பெற்றுத் தரப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த ஆடியோ பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரனையும் காவல்துறையினர் கைது செய்துள்ளார். அவரிடம் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, ராசிபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் விஜயராகவன், ராசிபுரம் காவல் ஆய்வாளர் செல்லமுத்து உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், அமுதாவிடம் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, ராசிபுரம், கொல்லிமலை பகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் வழங்கப்பட்ட சுமார் 4,500 பிறப்புச் சான்றிதழ்களை ஆய்வு செய்யும் பணியை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். மருத்துவமனை மற்றும் வீட்டில் பிறந்த குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் குறித்த உண்மை தன்மை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை இந்த விவகாரத்தில் தொடர்புடைய செவிலியர் பர்வீன் கைது செய்யப்பட்டுள்ளார்., கைது செய்யப்பட்ட பர்வீனிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் 12 குழுக்கள் அமைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 


;