நாகர்கோவில், ஆக.11- குமரி மாவட்டம் அழகப்பபுரம் பேரூராட்சி பொட்டல் குளம் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதன் அருகில் சிறு குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் கடந்த சுமார் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒக்கி புயலால் அங்கன்வாடி மையத்தில் சில பகுதிகள் இடிந்து சேதம் அடைந்தது. மேற்கூரை மிகவும் சிதிலமடைந்ததால் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கு பயின்ற குழந்தைகளை அருகில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஒரு வகுப்பு ஒதுக்கப்பட்டு அங்கு தற்போது அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது 20 குழந்தைகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு சத்துணவும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிதிலமடைந்த அங்கன்வாடி மையத்தை மீண்டும் சரிசெய்ய வலியுறுத்தி பலமுறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் அரசு நடுநிலைப் பள்ளியில் ஏற்கனவே வகுப்பறைகள் பற்றாக்குறையுடன் செயல்பட்டு வரும் நிலையில் கூடுதலாக அங்கு அங்கன்வாடி மையத்தை செயல்படுத்தி வருவது நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் உடனடியாக அங்கன்வாடி மையத்தை சீரமைத்து தர வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.