நாகப்பட்டினம்: நாகைக்கு அருகிலுள்ள புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 463 ஆம் ஆண்டுக் கந்தூரிப் பெருவிழாவின் 10 ஆம் நாள் நிகழ்ச்சியான பிரசித்தி பெற்ற சந்தனக்கூடு ஊர்வல நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. அன்று மாலை 6.30 மணிக்கு, நாகப்பட்டினம் யாஹுசைன் பள்ளித் தெருவிலிருந்து சந்தனக்கூடு புறப்பட்டது. இதனுடன், 20-க்கும் மேற்பட்ட அலங்கார ரதங்கள், கப்பல் வடிவப் பல்லக்குகள் வண்ண விளக்குகளின் கண்கவர் காட்சிகளாய், இன்னிசை, மேளதாளம், கேரளத்தின் செண்டை மேளம், தப்பாட்டம், தப்ஸ் இசை மற்றும் நாட்டுப்புற நடன நிகழ்ச்சிகளுடன் நாகை நகரை வலம் வந்து, நள்ளிரவில் நாகூரை அடைந்தது. நாகூர் நகரின் முக்கிய வீதிகளில் சந்தனக் கூடு பவனி வந்து, புதன்கிழமை விடியற்காலை, 4.30 மணிக்கு தர்காவுக்கு முன்னால் நிறைவு பெற்றது. இவ்விழாவின் பாதுகாப்பிற்காக 1000-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர். ஜனவரி26 அன்று இரவு, கொடியேற்ற நிகழ்ச்சியுடன் துவங்கிய நாகூர் தர்கா ஆண்டுப் பெருவிழா, 10 ஆம் நாள் சந்தனக்கூடு நிகழ்வு முடிவுற்ற நிலையில், பிப்.8 முன்னிரவில், கொடியிறக்கப்பட்டு, நாகூர் கந்தூரி விழா நிறைவு பெறுகிறது. சென்னை உயர்நீதி மன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட இடைக்கால நிர்வாகிகள் விழாவிற்கான சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.