தூத்துக்குடி:
தூத்துக்குடியில் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுமி மற்றும் தாயார் குடும்பத்தோடு ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றனர். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், பொம்மையாபுரம் பகுதியை சேர்ந்த ராசு மகன் ஐயப்பன் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பகுதியைச் சேர்ந்த 14 வயது மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் இது குறித்து கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில், ஐயப்பனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான ஐயப்பனின் தம்பி ரமேஷ் என்பவர் காவலராக பணிபுரிந்து வருகிறார்.
அவர் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவர்களிடமிருந்து பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி மனு அளிப்பதற்காக பாதிக்கப்பட்ட சிறுமியுடன், அவரது தாயார் தனது 2 மகன்களுடன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார். அப்போது, சிறுமியின் தாயார் மண்ணெண்ணெய்யை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதையடுத்து காவலர்கள் அவர்களை தடுத்துநிறுத்தினர். பின்னர் அவர்களை ஆட்சியரிடம் மனு அளிக்கஅழைத்துச் சென்றனர்.