திருவண்ணாமலை, பிப். 27- திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரப்பகுதிகளில் பட்டு சேலை உற்பத்தி செய்யும் நிறுவனம் வைத்துள்ள சிலர், வருமான வரித்துறைக்கு முறையாக கணக்கு காட்டாமல் வரிஏய்ப்பு செய்துள்ளதாகவும், ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாகவும் வருமானவரித் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சென்னை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள், ஆரணியில் உள்ள சில பட்டு சேலை உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத முக்கிய ஆவணங்களையும், லட்சக்கணக்கான ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சோதனையில், பட்டு சேலை உற்பத்தி செய்த தொழிலதிபர்கள் சிலர், வரி ஏய்ப்பு செய்துள்ளதும், ஏராளமான சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.