அவிநாசி அருகே இறைச்சிக் கழிவுகளை கொட்டிய வாகனம் சிறைப்பிடிப்பு
அவிநாசி, மே 11-அவிநாசி அருகே தொடர்ந்து இறைச்சிக் கழிவுகளை கொட்டி வந்த வாகனத்தை பொதுமக்கள் வெள்ளியன்று இரவு சிறைபிடித்தனர்.அவிநாசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட துலுக்கமுத்தூர், அய்யம்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் பெருமளவு விவசாயத்தையே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் உள்ள தோட்டத்துப் பகுதிகள், சாலையோரங்களில் சுகாதாரக் கேடு ஏற்படுத்தும் வகையில் துர்நாற்றம் வீசும்இறைச்சிக் கழிவுகளை மர்ம நபர்கள் கொட்டி வந்தனர். இதனால் கால்நடைகள் உள்பட பொதுமக்கள் பாதிப்பிற்குள்ளாகி வந்தனர். இதைத் தடுக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையில் வெள்ளியன்று இரவு துலுக்கமுத்தூர் அருகே கானாங்குளம் பொய்யேரிப் பகுதியில் இறைச்சிக் கழிவுகளைக் கொட்ட வந்த சரக்கு ஆட்டோவை பொதுமக்கள் சிறைபிடித்து அவிநாசி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் புகார் மனுவும் அளித்தனர். இதன்பேரில் அவிநாசி காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
அகில இந்திய தொழில் பழகுநர் தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்
திருப்பூர், மே11-மத்திய அரசு நடத்தும் அகில இந்திய தொழில் பழகுநர் தேர்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,தொழிற் பயிற்சி நிலையங்களில் குறிப்பிட்ட தொழிற்பிரிவில் பயின்று தேசியச் சான்றிதழ் பெற்று, அதே பிரிவில் தனி நபராக மே 29 முதல் ஜூன் 14வரை நடைபெற உள்ள 109 ஆவது அகில இந்திய தொழில் பழகுநர் தொழில் தேர்வில் கலந்து கொள்ள விண்ணப்பிக்கலாம். இதில் ஐடிஐ படித்து தேசிய தொழிற் பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள், தொழில் பழகுநர் சட்டம் 1961 கீழ் தொழில் பழகுநர் பயிற்சியை தொழிற்சாலைகளில் முடிக்காதவர்கள், தொழில்பழகுநர் பயிற்சி வழங்கும் பட்டியலில் இடம் பெற்றுள்ள நிறுவனங்களில் நேரடிப் பணியாளர்களாக குறைந்தபட்ச அனுபவம் பெற்றவர்கள், மத்திய அரசின் தொழிற் பழகுநர் சான்றிதழ் பெற விரும்பினால் தனி விண்ணப்பதாரராக மத்திய அரசு நடத்தும் தொழில் பழகுநர் தேர்வில் கலந்து கொள்ளலாம்.இதற்கான விண்ணப்பங்களை திருப்பூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரிடம் இருந்து பெற்று தாங்கள் பணிபுரியும் நிறுவனம் மூலமாக மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். இதில் தேர்வுக் கட்டணம் ரூ.200 செலுத்த வேண்டும்.தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு மத்திய அரசின் தொழில் பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும்.
கார் மோதி பனியன் தொழிலாளி பலி
அவிநாசி, மே 11-அவிநாசி அருகே கார் மோதி நடந்து சென்ற பனியன் நிறுவனத் தொழிலாளி சனியன்று உயிரிழந்தார். அவிநாசி அருகே பழங்கரை தந்தைபெரியார் காலனி பகுதியை சேர்ந்தவர் தவபாண்டியன் (20). பனியன் நிறுவனத் தொழிலாளி. இவர் அவிநாசிலிங்கம்பாளையம் பேருந்து நிறுத்ததில் இருந்து திருப்பூர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவிநாசியில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற கொண்டிருந்து கார் தவபாண்டியன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தவபாண்டியன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றிஉயிரிழந்தார். இது குறித்து அவிநாசி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.