tamilnadu

தாழையூத்து அருந்ததிய ஊராட்சித் தலைவியை கொல்ல முயன்ற வழக்கு

திருநெல்வேலி, அக்.10- நெல்லை மாவட்டம், தாழையூத்து ஊராட்சி முன்னாள் தலைவியை கொல்ல முயன்ற வழக்கில் 6 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நெல்லை வன்கொடுமை தடுப்பு   நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.இத்தீர்ப்பை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்றுள்ளது.

நெல்லை அருகே உள்ள தாழை யூத்து ஊராட்சி தலைவியாக கிருஷ்ண வேணி ( 40) என்பவர் கடந்த 2011 ஆம் ஆண்டு பதவி வகித்து வந்தார். 2011ஆம் ஆண்டு ஜூன் 13 ஆம் தேதி கிருஷ்ணவேணியை சாதி ஆதிக்க கும்பல் சரமாரியாக அரிவாளால்வெட்டியது. இதில் அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார்.

 இது தொடர்பாக தாழையூத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பு  என்ற சுப்பிரமணியன் (60),சுல்தான் மைதீன்(60), கார்த்திக் (31), பிரவீன் ராஜ்( 32), ஜேக்கப்( 32), விஜய ராம மூர்த்தி (31), நடராஜன் உள்பட 9 பேரை  கைது செய்தனர். இந்த வழக்கு விசார ணை நெல்லை மாவட்ட 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் அதாவது வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு விசார ணையின் போது நடராஜன் இறந்து விட்டார். 

இந்த நிலையில் வழக்கு இறுதி விசாரணை நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் நடந்து வந்தது. செவ்வாய்க்கிழமையன்று நீதிபதி  வழக்கை விசாரித்து, சுப்பு என்ற  சுப்பிரமணியன், சுல்தான் மைதீன், கார்த்திக், பிரவீன் ராஜ், ஜேக்கப், விஜயராமமூர்த்தி ஆகிய 6 பேரை யும் குற்றவாளிகளாக அறிவித்து தீர்ப்பளித்தார்.  2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதை அடுத்து 6  பேருக்கும் தண்டனை விவரங்கள் வியாழக்கிழமையன்று  அறிவிக்கப் பட்டது. அதன்படி குற்றவாளிகள் 6  பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை  விதித்து நீதிபதி சுரேஷ்குமார் தீர்ப் பளித்தார். மேலும் குற்றவாளிகளில் 4 பேருக்கு தலா ரூ. 1.30 லட்சம் அப ராதமும், மற்ற 2 பேருக்கும் தலா  ரூ.1.10 லட்சமும் அபராதம் விதித்து உத்தரவிட்டார். 

இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட வர்கள் தரப்பில் வழக்கறிஞர் கந்த சாமி ஆஜராகினார்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்பு

இத்தீர்ப்பை வரவேற்று, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச்செயலாளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

2006 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் தாழையூத்து ஊராட்சியின் தலைவராக  தலித்  அருந்ததியர் சமூகத்தை சார்ந்த  கிருஷ்ணவேணி தேர்வு செய்யப்பட்டார். அப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் தொடர்ந்து சாதிய அவதூறுகளுக்கு உள்ளாக்கப்பட்டார்.

காசோலையில் கையெழுத்து இடுவதைத் தவிர எந்த உரிமையும் அவருக்கு இல்லை. நாற்காலியில் உட்காருவது உள்பட அனைத்தும் தடை செய்யப்பட்டன. சாதி ஆதிக்க சக்திகளால் சாதிய ரீதியாகவும் ,பாலின ரீதியாகவும் பல்வேறு ஒடுக்குமுறைக்கு தொடர்ந்து உள்ளாக்கப்பட்டார்.

வார்டு உறுப்பினர் சுப்பிரமணியின் எதிர்ப்பை மீறி பெண்களுக்கான கழிவறையை கிருஷ்ணவேணி கட்டிக் கொடுத்தார்.இவ்வாறு  தொடர்ந்து செயல்பட்டதால் 2011 இல்  ஒரு நாள் பணியை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த கிருஷ்ணவேணியை சுப்பிரமணியன் உள்ளிட்ட  சாதி ஆதிக்க கும்பல் ஆயுதங்களால் கொடூரமாகத் தாக்கியது. மிகக் கடுமையான வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிய  கிருஷ்ணவேணி சென்னை ஸ்டான்லி உள்ளிட்ட மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார்.

கிருஷ்ணவேணி நீதிமன்றத்தில் கடந்த 13 ஆண்டு காலம் சட்டப்போராட்டத்தை நடத்தி வந்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்டு பல்வேறு அமைப்புகள் அவருக்கு இப்போராட்டத்தில் உதவி வந்தன.

குற்றவாளிகள்  ஆறு பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும் அபராதமும்  வழங்கி தீர்ப்பு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பினை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்கிறது.இதற்காக போராடிய அனைவருக்கும் குறிப்பாக நீதிக்கான போராட்டத்தை துணிவுடன் நடத்திய கிருஷ்ணவேணிக்கும் பாராட்டுதல்களைத் தெரிவிக்கிறது. மேலும் தமிழகத்தில் இதுபோன்று சாதிய வன்முறைக்கு இன்றும் உள்ளாக்கப் படுகின்ற தலித் பஞ்சாயத்து தலைவர்களுக்கு பாதுகாப்பையும் சட்டப்பூர்வமான உரிமைகளையும் வழங்கிட வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி வேண்டுகோள் விடுக்கிறது.