tamilnadu

img

உயிர்ப்பலி வாங்க காத்திருக்கும் ஆனந்தவல்லி வாய்க்கால் பாலம்

தஞ்சாவூர் ஜூன்.1-உயிர் பலி வாங்க காத்திருக்கும் ஆனந்தவல்லி வாய்க்கால் பாலத்தை உடனடியாக இடித்துவிட்டு புதிதாக அமைத்து தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூ ரணியில் நகரின் நடுவில் ஆனந்தவல்லி வாய்க்கால் அமைந்துள்ளது. இந்த கிளை வாய்க்கால் ஆவணத்தில் உள்ள மெயின் வாய்க்காலில் இருந்து பழைய நகரம், மாவடுகுறிச்சி, பொன் காடு, நாட்டாணிக் கோட்டை வழியாக சென்று கழனிவாசலில் நிறைவு பெறுகிறது. சுமார் 12 கிலோ மீட்டர் நீளமுள்ள காவிரியின் கிளை வாய்க்காலான  ஆனந்தவல்லி வாய்க்கால் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. தற்போது கடந்த சில ஆண்டுகளாக ஆனந்தவல்லி வாய்க்காலில் போதிய அளவு தண்ணீர் வராததாலும், சரியான பராமரிப்பு இல்லாததாலும் மணல் மேடிட்டு வீணாகி வருகிறது. இந்த வாய்க்காலின் குறுக்கே 20க்கும் மேற்பட்ட பாலங்கள் உள்ளது. இந்நிலையில் பேராவூரணி டாக்டர் காந்தி மருத்துவமனை அருகில், ஆஸ்பத்திரி சாலையிலிருந்து, ஆவணம் சாலைக்கு செல்லும் வழியில் வாய்க்காலின் குறுக்கே பாலம் கட்டப்பட்டுள்ளது. மிகப் பழமை வாய்ந்த இந்தப் பாலம் கடந்த சில ஆண்டுகளாக உடைந்து சேதமடைந்த நிலையில் உள்ளது. இந்தப் பாலம் எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக பள்ளி வாகனங்கள், பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் தினசரி நூற்றுக்கணக்கில் சென்று வருகின்றன. எனவே ஆற்றில் தண்ணீர் வராத இந்த நேரத்தில் பழுதடைந்த பாலத்தை இடித்து விட்டு புதிதாக அமைத்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பேராவூரணி ஒன்றிய செயலாளர் ஏ.வி.குமாரசாமி கூறுகையில், 50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பாலம் தற்பொழுது வலுவிழந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. பாலத்தின் கட்டுமானம் சிதைந்து, அடிப்பகுதி விரிசலுடன் உள்ளது. பேராபத்து விபரீதம் ஏற்படும் முன்பாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக இந்த பாலத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக பாலம் அமைத்து தர வேண்டும். இவ்வழியாக வாகனப் போக்குவரத்து உள்ள நிலையில் பேராபத்து ஏற்படும் முன்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக சரி செய்து தர வேண்டும். இல்லையென்றால் மக்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்" என்று தெரிவித்தார்.