ரூ.6 ஆயிரம் உதவித்தொகை விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்
தஞ்சாவூர் ஜூலை.6- தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்திட ஆண்டுக்கு ரூ6 ஆயிரம் வழங்கிடும் பொருட்டு பட்டா நிலம் வைத்து விவசாயம் செய்து வரும் தகுதியான விவசாயிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, இதுவரை மாவட்டத்தில் 97,020 விவசாயிகளின் பட்டியல் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் விடுபட்ட தகுதியான அனைத்து விவசாயிகளும் தங்களது பெயர்களை பதிவு செய்ய ஏதுவாக மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் ஆய்வர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 9-ம் தேதி சிறப்பு குறை தீர் முகாம் காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. தங்களது நிலத்திற்கான விவரம், ஆதார், வங்கிக் கணக்கு எண், ஸ்மார்ட் கார்டு(குடும்ப அட்டை), அலைபேசி எண் விவரங்களுடன் தொடர்புடைய அலுவலகத்தை அணுகி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முசிறியில் தொடர் மணல் திருட்டு
முசிறி ஜூலை 6- திருச்சி மாவட்டம் முசிறி காவிரியாற்று பகுதியில் தொடரும் மணல் திருட்டை தடுக்க காவல்துறை, வருவாய் துறையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் முசிறி காவல் ஆய்வாளர் பால்ராஜ் தலைமையில் காவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது முசிறி சுடுகாட்டுதுறை மற்றும் காவிரியாற்று படுகையிலிருந்து 3 பேர் மொபட்டில் சாக்கு மூட்டைகளில் மணலை திருடி கொண்டு வந்தனர். ரோந்து காவலர்களை பார்த்ததும் மூவரும் மணல் மூட்டைகளுடன் மொபட்டை போட்டு விட்டு தப்பி ஓடினர். இதையடுத்து மொபட், மணல் மூட்டைகளை பறிமுதல் செய்து மணல் திருட்டில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.