tamilnadu

img

6 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை மீண்டும் வழங்கல்

தரங்கம்பாடி, ஜூலை 6- நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே திருமணஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் 3 அடி உயரமே உள்ள மாற்றுத்திறனாளி முரளி(53). இவர் மட்டுமின்றி இவரது குடும்பத்தில் உள்ள அனைவருமே மாற்றுத்தி றனாளிகள் என்பது வேதனையான ஒன்று. இவரது சகோதரர் ரகு(48) 4 அடி உயரமும், சகோதரி லெட்சுமி(45) 4 அடிக்கும் சற்று குறைவாகவும், இளைய சகோதரர் பாலாஜி(35) 3 அடி உயரமும் கொண்ட மாற்றுத்திறனாளிகள். இவர்களது தாயார் வசந்தாவும்(73), இக்குடும்பத்திலேயே சிறு வயது முதல் வசித்து வரும் வசந்தாவின் சகோதரி லெட்சுமி(60) என்பவரும் காது கேட்காத, பேசவும் முடியாத மாற்றுத்திற னாளிகள் ஆவர்.

முரளியின் தந்தை நாராயணன், திருமணஞ்சேரியில் உள்ள பெருமாள் கோவிலில் அர்ச்சகராக பணியாற்றியவர். நல்ல உடல் தகுதியுடன் இருந்த இவர், காது கேட்காத, வாய்பேச முடியாத  தனது அக்காள் மகள் வசந்தாவை 55 ஆண்டுக்கு முன்பு கருணை உள்ளத்தோடு திருமணம் செய்து கொண்டார். மேலும் வசந்தாவின் சகோதரி லெட்சுமியையும் தன் குடும்பத்தில் சேர்த்து பராமரித்து வந்தார். இந்நிலையில் 4 குழந்தைகளுமே மாற்றுத்திறனாளிகளாக பிறந்தது நாராய ணனின் வாழ்க்கையில் தீராத சோகத்தை ஏற்படுத்தியது. இருந்த போதிலும், தான் வாழ்ந்த வரையில் தனது குடும்பம் வறுமையின் கோரப் பிடியில் சிக்காமல், கண்ணை இமை காப்பது போல காப்பாற்றி வந்தார் நாராயணன். மேலும், தனது ஒரே பெண்ணான லெட்சுமிக்கும் திருமணம் செய்து வைத்தார். 2001-ஆம் ஆண்டு நாராயணன் இறந்த பிறகு திக்குத் தெரியாத காட்டில் விட்டது போன்று தனித்து விடப்பட்டது அவரது குடும்பம். தன் தந்தை சேர்த்து வைத்திருந்த சொத்தை கொஞ்சம் கொஞ்சமாக விற்று தனது குடும்பத்தை காப்பாற்றி வந்த குடும்பத்தின் தலைமகனான முரளி, தந்தையின் மரணத்துக்கு பிறகு செய்வதறியாது திகைத்து நிற்கிறார். இக்குடும்பத்தில் தற்போது வசிக்கும் 5 பேரும், வருவாய்த்துறை சார்பில் வழங்கப்படும் ஊனமுற்றோர் உதவித்தொகை தலா ஆயிரம் ரூபாய் வீதம் 5 ஆயிரத்தை வைத்து தற்போது குடும்பத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் சோதனை மேல் சோதனையாக பாலாஜி நடத்தி வந்த மாற்றுத்திறனாளிகள் சுயஉதவிக் குழுவில் இருந்த உறுப்பினர்கள் சரி வர பணம் கட்டாத காரணத்தால், அக்கடன் தொகைக்காக அக்குழுவின் தலைவரான பாலாஜி மற்றும் உறுப்பினர்கள் வசந்தா, லெட்சுமி ஆகிய 3 பேரின் மாற்றுத்திறனாளி கள் உதவித்தொகையை 6 மாதங்களாக நிறுத்தி வைத்தது வங்கி நிர்வாகம். இதனால் உதவித் தொகையை வைத்து 2 வேளை உணவு சாப்பிட்டு வந்த இக்குடும்பத்தினர், தற்போது ஒருவேளை உணவுக்கே சிரமப்படும் நிலைக்கு தள்ளப்பட்டனர். தற்போது, ரகு மட்டும் சிறுசிறு வேலைகளை செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். சகோதரர்கள் 3 பேரும் பத்தாம் வகுப்பு படித்துள்ளனர். தங்களில் யாரேனும் ஒருவருக்காவது அரசு வேலை ஏற்படுத்திக் கொடுத்தால் தங்கள் குடும்பம் தலைநிமிரும் என ஏக்க கனவோடு உள்ளனர்.  இந்நிலையில் உதவித்தொகை 6 மாதங்களாக வராதது குறித்து ஊடகங்களில் செய்தி வெளியானதையடுத்து அதிகாரிகள் இரண்டு தினங்களுக்கு முன்பு குத்தாலம் அலுவலகத்தில் நேரில் உதவித்தொகையை வழங்கினர்.

இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் கூறும்போது, 6 பேருமே மாற்றுத்திறனாளியாக உள்ள நிலையில் அரசு வழங்கிய உதவியை திடீரென நிறுத்தி விட்டதால் அன்றாட உணவுக்கு தவியாய் தவிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். பல்வேறு ஊடக ங்களில் செய்தி வெளியான பிறகே அதிகாரி கள் உதவித்தொகையை மீண்டும் வழங்கியுள்ளனர்.  கடந்த 2 ஆண்டுக்கு முன்னர் அதே குடும்பத்திற்கு உதவித்தொகை நிறுத்தப்பட்ட போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தலையிடப்பட்ட பிறகு உதவித்தொகை வழங்கப்பட்டது. அரசு அதிகாரிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கக் கூடிய உதவியை முறையாக தாமதமின்றி, தடையின்றி தொடர்ந்து வழங்க வேண்டுமென்று என்றார்.