tamilnadu

img

5, 8 வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிப்பை திரும்பப் பெற அறிவியல் இயக்கம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை செப்.16-  5 மற்றும் 8-ஆம் வகுப்பு களுக்கு பொதுத்தேர்வு என்ற தமிழக அரசின் அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென தமிழ்நாடு அறிவியல் இயக்கம் வலியுறுத்தி உள்ளது.  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் க.சதாசிவம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார், பொருளாளர் ஈ.பவுனம்மாள் ஆகியோர் அறிக்கை வாசித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் எல்.பிரபாகரன், அறிவியல் இயக்க முன்னோடிகள் ஆர்.விவேகாந்தன், ஆர்.ராஜ்குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினர். முன்னதாக மாவட்டத் துணைத் தலைவர் அ.மணவாளன் வரவேற்க, துணைத்தலைவர் ம.வீரமுத்து நன்றி கூறினார். தமிழக அரசுப் பள்ளிகளில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அறிவுறுத்தி வெளியிடப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும். நடப்பாண்டுக்கான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் குறைந்தது 500 இளம் விஞ்ஞானிகளைப் பங்கேற்கச் செய்வது, முன்னாள் அறிவொளி இயக்கத் தொண்டர்களை இணைத்து இரண்டாவது அறிவொளி இயக்கத்தை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கணினி அறிவியல், அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல் ஆகியவற்றை மையப் பொருளாகக் கொண்டு நடத்துவது, துளிர் திறனறிதல் தேர்வில் 5 ஆயிரம் மாணவர்களைப் பங்கேற்கச் செய்வது மூடநம்பிக்கைகளுக்கு எதிராக வீதிகள் தோறும் பிரச்சாரம் நடத்துவது எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.