கும்பகோணம், செப்.27- கும்பகோணம் நகராட்சி க்குட்பட்ட தெருக்களில் புதிய குடிநீர் மீட்டர் இணைப்பு பணிக்காக குடிநீர் இணைப்பு துண்டித்து புதிய குடிநீர் வழித்தடம் அமைக்கும் பணிக்காக அனைத்து தெருக்களின் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள காங்கிரீட் சாலைகள் தார் சாலைகள் அனைத்தும் பெரும் இயந்திரம் மூலம் வெட்டப்பட்டு சாலைகள் அனைத்தும் சிதலமடைந்து உள்ளதால் பொதுமக்கள் வாகனத்தில் செல்வோர் மற்றும் குடியிருப்பு வீடுகளுக்கு செல்ல முடியாமல் மிகவும் ஆபத்துகள் எப்பொழுது நடக்குமோ என்ற அச்சத்திலும் வயது மூத்தவர்கள் சாலைகளில் செல்ல சிரமப்படும் நிலையும் பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல அவதிப்படும் நிலையும் இருந்து வருகிறது. தற்போது மழைக்காலம் என்பதால் சாலைகளில் கற்களும் மண் குவியல்கள் உள்ளதால் பொதுமக்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் அச்ச நிலையில் உள்ளது. இதில் மோதிலால் தெரு பிரம்மன் கோவில் தெரு சௌராஷ்டிரா தெரு போன்ற பகுதிகளில் பாதாள சாக்கடை இணைப்பிற்காக வெட்டப்பட்ட சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது 17வது வார்டு வண்ணாங்கண்ணி பகுதியில் பாதாள சாக்கடைக்கு முன்பணம் பெற்றும் இணைப்பு வழங்காமல் சாக்கடை நீர் சூழ்ந்துள்ளது. ஆகவே இச்சாலைகளை சரி செய்து சாக்கடை நீரால் நோய் பரவாமலும் விபத்துகள் நேராமலும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் சார்பில் கும்பகோணம் நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. அதனடிப்படையில் மாநகராட்சி ஆணையர் ஜெகதீசன் சம்பந்தப்பட்ட பொறியாளர்களை அழைத்து குறைகளை கேட்டறிந்து சாலைகளில் பழுதுபட்டு உள்ள இடங்களை உடன் சரி செய்ய உத்தரவிட்டார் அதேபோல் கும்பகோணம் பேருந்து நிலையத்திற்கு வருகின்ற பயணிகளுக்கு இரவு நேரத்தில் பேருந்து நிலையத்தில் உள்ள கழிவறை பூட்டப்பட்டு சரியான பராமரிப்பு இன்றி இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டது இதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ஆணையர் தெரிவித்தார். இந்நிகழ்வின் போது சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன், நகரச் செயலாளர் செந்தில்குமார், நகரக் குழு உறுப்பினர்கள் ராஜகோபாலன், கே.ஆர். சந்திரன் மற்றும் உதவி பொறியாளர் பிரதான் பாபு, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் பொறியாளர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.