திருச்சிராப்பள்ளி:
பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவராக இருப்பவர் ஆக்ஸ்போர்ட் சுப்பிரமணியன். இவருக்கு சொந்தமாக திருச்சி பிராட்டியூரில் ஆக்ஸ்போர்ட் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் 1500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி வளாகத்தில் உள்ள சிமெண்ட் சுவரில்உட்கார்வது தொடர்பாக மாணவர்களிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில் 3ம் ஆண்டுமாணவர்களும், 2ம் ஆண்டு மாணவர்களும் மோதிக் கொண்டனர். இவர்கள் கைகளில் கிடைத்த கற்களாலும், உருட்டு கட்டைகளாலும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் இருதரப்பிலும் சேர்த்து 10 மாணவர்களுக்கு காயம்ஏற்பட்டது. காயம் ஏற்பட்ட மாணவர்களை, சக மாணவர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மருத்துவமனையில் குவிந்து இருந்த மாணவர்களை கலைந்து செல்ல செய்தனர். அதன் பின்னர் இருதரப்பினரிடையே விசாரணை நடத்தினர். பின்னர் மாணவர்களின் மோதலுக்கு காரணமான 5 மாணவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.