பென்னாகரம் அருகே மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஏரியூர் அருகே உள்ள பத்திர அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பூச்சி கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த உயர்நிலை பள்ளியில் 140க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறனர். அங்கு தலைமை ஆசிரியர் உட்பட 7 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தலைமை ஆசிரியர் சுப்பிரமணி பத்தாம் வகுப்பு மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாகவும் அதை வெளியில் சொன்னால் டிசி கொடுக்கப்படும் என்று மிரட்டுவதாகவும் மாணவிகள் பெற்றோர்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் இன்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பென்னாகரம் வட்டாட்சியர் சதாசிவம் ஏரியூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து தலைமை ஆசிரியர் சுப்பிரமணியை ஏரியூர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.