டெல்டா பகுதியில் தூர்வாரும் பணி
சென்னை, மே 23- டெல்டா மாவட்டங்களில் தூர்வா ரும் பணி நடைபெறும் பட்டியலில் விடுபட்டுள்ள கடலூர் மாவட்டத்தை இணைத்து, நிதி ஒதுக்கி உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் பொதுப் பணித்துறை சார்பில் டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிக்கு 67.24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இம்மாவட்டங்களில் நிறைவேற்ற வேண்டிய பணிகளின் எண்ணிக்கையையும், இப்பணிகளை மேற்பார்வையிடுவதற்கான அதிகாரிகளின் பட்டியலையும் பொதுப்பணித்துறை வெளியிட்டுள்ளது. ஆனால், டெல்டா பாசனப் பகுதியில் முக்கியமான மாவட்டமாக உள்ள கடலூர் மாவட்டம் பட்டியலில் இடம் பெறவில்லை. இந்த மாவட்டத்திற்கு நிதியும் ஒதுக்கப்படவில்லை.
பணிகளின் எண்ணிக்கையும் தீர்மானிக்கப்படவில்லை. தமிழக அரசு இந்த பாரபட்சமான நடவடிக்கைகளை கைவிட்டு உடனடியாக கடலூர் மாவட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கி உத்தரவிட வேண்டும். இந்த மாவட்டங்களில் நடைபெறும் இந்த தூர்வாரும் பணியில் ஊழல் முறைகேடுகளுக்கு இடம் தராமல் விவசாயத் தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும் வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் இந்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.