மீண்டும் எல்.ஐ.சி குறி வைக்கப்பட்டுள்ளது. வணிக இதழ்கள் பரபரப்பாக எல்.ஐ.சியின் பங்குகள் சந்தைக்கு வரப் போகின்றன என்று எழுதுகின்றன. வணிக இதழ்கள் யாரால் நடத்தப்படுகிறதோ அவர்கள் இது போன்ற பங்கு விற்பனையை ஆசையோடு எதிர்நோக்கி காத்திருப்பவர்கள். ஆனால் செய்திகளின் பின்புலமாக ஆசை மட்டும் இருப்பதாக தெரியவில்லை. குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்க்குமென்பார்களே அது போல மக்களின் மனதை தயார் செய்கிற அரசின் நோக்கமும் இதில் ஒளிந்திருக்கலாம்.
வஞ்சத்தோடு காத்திருந்தவர்கள்
இது இந்தியப் பெரும் தொழிலதிபர்களின் கால் நூற்றாண்டு கனவு. 1956ல் 245 தனியார் நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட்டு எல்.ஐ.சி பிறந்தது. அப்போதே இன்சூரன்ஸ் வணிகத்தில் டாட்டா, பிர்லா, சிங்கானியா போன்ற பெரும் பெரும் புள்ளிகள் இருந்தவர்கள்தான். தலைமுறை தலைமுறையாக வஞ்சம் தீர்க்க காத்திருந்தவர்களுக்கு வரப்பிரசாதமாக 1991 க்கு பின்னர் அமலான உலகமயம் அமைந்தது. அவர்களின் முதல் குறியாக அமைந்தது எல்.ஐ.சிதான். 1994 லிலேயே மல்ஹோத்ரா குழு அறிக்கை வெளி வந்தது. அது 50 சதவீத எல்.ஐ.சி பங்குகள் விற்கப்பட வேண்டுமென்றும், அந்நிய முதலீட்டிற்கு இந்த துறை திறந்து விடப்பட வேண்டுமென்றும் பரிந்துரைத்தது. உலகமயத்தின் ஆனால் இன்சூரன்ஸ் ஊழியர்களின், இடதுசாரிகளின் கடும் எதிர்ப்பு அம் முன்மொழிவுகளுக்கு எதிரான மக்கள் கருத்தை உருவாக்கியது. இன்சூரன்ஸ் துறையில் எல்.ஐ.சி “இயல்பான ஏகபோகமாக” அமைய வேண்டுமென்ற பிரச்சாரம் மக்கள் கவனத்தை ஈர்த்தது. ஐந்தாண்டு திட்டங்களுக்கு எல்.ஐ.சி அளித்து வருகிற நிதியாதாரங்கள், ஆதார தொழில் வளர்ச்சிக்கு அது அதன் பங்களிப்பு, சமூகத்தின் கடைசி தட்டு வரை காப்பீடை கொண்டு போய் சேர்ப்பது, லஞ்ச லாவண்யமற்ற உரிமப் பட்டுவாடா ஆகியன மக்கள் மத்தியிலான உரையாடல்களில் இடம் பெற்றன. இடதுசாரிகளுக்கு நாடாளுமன்றத்திற்குள் இருந்த பலமும் இவ் வாதங்களுக்கு வலு சேர்த்தது. நாடாளுமன்றத்திற்கு உள்ளும்- வெளியுமான போராட்டம் எவ்வாறு இணைக்கப்பட வேண்டும் என்பதற்கு இப் பிரச்சனை உதாரணமாக அமைந்தது.
பாராசாரி குதிரைக்கு கடிவாளம்
எத்தனையோ துறைகளை உடைத்து உள்ளே நுழைந்த உலகமயம் இன்சூரன்ஸ் துறையில் அவ்வளவு எளிதாக நுழைய முடியவில்லை. 1996 ல் நரசிம்மராவ் அரசாங்கம் வெளியேறுகிற வரை மல்ஹோத்ரா குழு அறிக்கைகளில் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. கொள்கை அளவில் ஏற்பதாக அறிவித்ததோடு நின்றது. அடுத்து ஐக்கிய முன்னணி அரசு. இடதுசாரிகளின் ஆதரவோடு அமைந்த அரசாங்கம். பிரதமராக குஜ்ரால் இருந்த போது நாடாளுமன்றத்தில் இன்சூரன்ஸ் கட்டுப்பாடு சட்ட வரைவு கொண்டு வரப்பட்டது. ஆனாலும் அதில் அந்நிய முதலீடு, தனியார்கள் அனுமதி பற்றி மட்டுமே இருந்ததே தவிர அரசு இன்சூரன்ஸ் நிறுவனங்களின் பங்கு விற்பனை குறித்து பேசப்படவில்லை. அன்றைய நிதி அமைச்சர் பட்ஜெட் உரையில் எல்.ஐ.சி, அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பலப்படுத்தப்படுமென அறிவித்தார். இது மக்கள் கருத்திற்கு கிடைத்த முதல் வெற்றி. எனினும் குஜ்ரால் அரசு கொண்டு வந்த இன்சூரன்ஸ் கட்டுப்பாட்டு மசோதாவும் நிறைவேறவில்லை. காத்திருந்தார்கள் அந்நிய முதலீடும், தனியார்களும் தங்களுக்கு சாதகமான அரசியல் சூழ்நிலைமைக்காக.
வாஜ்பாய் அரசாங்கம் வந்தது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சுதேசி பேசி தெருத் தெருவாக சுதேசி சோப், சுதேசி பானம் என்று கூவி கூவி விற்று வந்தவர்கள். ஆட்சி நாற்காலியில் அமர்ந்தவுடன் “படிப்படியான மீண்டும் எல்.ஐ.சி குறி வைக்கப்பட்டுள்ளது. வணிக இதழ்கள் பரபரப்பாக எல்.ஐ.சியின் பங்குகள் சந்தைக்கு வரப் போகின்றன என்று எழுதுகின்றன. வணிக இதழ்கள் யாரால் நடத்தப்படுகிறதோ அவர்கள் இது போன்ற பங்கு விற்பனையை ஆசையோடு எதிர்நோக்கி காத்திருப்பவர்கள். ஆனால் செய்திகளின் பின்புலமாக ஆசை மட்டும் இருப்பதாக தெரியவில்லை. குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்க்குமென்பார்களே அது போல மக்களின் மனதை தயார் செய்கிற அரசின் நோக்கமும் இதில் ஒளிந்திருக்கலாம். அந்நிய முதலீடு அனுமதியே” (Calibrated Globalisation) சுதேசியின் இலக்கணம் என்று அறிவித்தார்கள். காங்கிரஸ் காலத்தில் சுதேசி ஆட்டம் போட்ட ஆடிட்டர் குருமூர்த்தியின் சுதேசி ஜாக்ரான் மன்ச் போன்ற சங் பரிவார் அமைப்புகள் முணு முணுப்பையே எதிர்வினையாக தந்து தங்கள் இரட்டை முகத்தை காண்பித்து விட்டு மௌனமாகி விட்டன. நிதியமைச்சர் யஸ்வந்த்சிங் “இன்சூரன்ஸ் கட்டுப்பாட்டு ஆணைய மசோதாவை” கொண்டு வந்தார். அதில் 49 சதவீத அந்நிய முதலீடு அனுமதி என்றே முதலில் இருந்தது. கடும் எதிர்ப்பு எழுந்தது. ஆரம்பத்தில் காங்கிரஸ் கூட எதிர்க்கிற பாவத்தையே காட்டியது.
ஆனால் திரை மறைவு பேரங்கள் காங்கிரஸ் நிலையில் மாற்றத்தை கொண்டு வந்தது. இதற்கு அரசியல் இடைத் தரகராக இருந்த காங்கிரஸ் எம்.பி முரளி தியோரா அமெரிக்க அதிபர் கிளிண்டன் அவர்களால் புத்தாயிரம் ஆண்டு விருந்துக்கு அழைக்கப்பட்டு “இந்திய இன்சூரன்ஸ் சீர்திருத்தங்களின் சிற்பி” என்று பாராட்டப்பட்டார். அவருக்கு அங்கு விருந்து, பன்னாட்டு இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு இந்தியாவில் விருந்து. என்றாலும் பொது வெளியில் இருந்த எதிர்ப்பை சமாளிக்க 49 சதவீத அந்நிய முதலீட்டை 26 சதவீதம் என்று குறைத்து அந்த மசோதாவை சட்டம் ஆக்க வேண்டியிருந்தது. அப்போதும் எல்.ஐ.சி, அரசு பொது இன்சூரன்ஸ் பங்கு விற்பனையை அவர்களால் கொண்டு வர முடியவில்லை. இக் காலத்தில்தான் இன்சூரன்ஸ் ஊழியர்கள் நடத்திய ஒரு கோடி கையெழுத்து இயக்கம் இலக்குகளை கடந்து ஒன்றரைக் கோடி கையெழுத்துக் களோடு மக்களால் பேசப்படுவதாக மாறியது. ஆனால் பெரிய பெரிய பன்னாட்டு தனியார் நிறுவனங்கள் ஏ.ஐ.ஜி, சன் லைப், புருடன்சியல் போன்றவை உள்ளே நுழைந்தன. 26 சதவீதம் என்கிற அந்நிய முதலீட்டு வரையறை இருந்ததால் இந்திய இன்சூரன்ஸ் நிறுவனங்களின் இளைய பங்காளிகளாகவே வர வேண்டி வந்தது. லாபம் கொட்டும் தொழில் எனும் போது கௌரவமா பார்க்கும் பன்னாட்டு மூலதனம்? இப்படிப்பட்ட கடிவாளத்தை எதிர்ப்பியக்கங்களால் போட முடிந்தாலும் பன்னாட்டு மூலதனக் குதிரை திமிறிக் கொண்டுதான் இருந்தது.
காத்திருக்காமல் கம்பி நீட்டியவர்கள்
இது மீண்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம்-1 காலத்தில் தொடுக்கப்பட்டது. அப்போது நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி. இரண்டு மசோதாக்கள் கொண்டு வரப்பட்டன. ஒன்று எல்.ஐ.சி பங்கு விற்பனையையும், எல்.ஐ.சி க்கு உள்ள அரசு உத்தரவாதத்தை நீக்குவதையும் உள்ளடக்கியது. இரண்டாவது, இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டை 49 சதவீதம் ஆக உயர்த்துவது. மீண்டும் கருத்தாக்க களம் சூடானது. இடதுசாரிகள் கடும் எதிர்ப்பை நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தெரிவித்தனர். இன்சூரன்ஸ் ஊழியர்களும் களம் இறங்கினர். எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கான சரத்து அம் மசோதாவில் இருந்து நீக்கப்பட்டது. அரசு உத்தரவாதமும் தப்பியது. 2009ல் கிடைத்த இன்னொரு குறிப்பிடத் தக்க வெற்றி. இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டு அதிகரிப்பு மசோதா நாடாளுமன்ற நிலை குழுவின் பரிசீலனையில் தேறவில்லை. வினோதம் என்னவெனில் 1999ல் அந்நிய முதலீட்டு மசோதாவை நிறைவேற்றிய யஸ்வந்த் சின்காதான் இந்த நிலைக் குழுவின் தலைவர். உலக நிதி நெருக்கடியின் பின் புலத்தில் இப்போது அந்நிய முதலீடு உயர்வு உசிதமல்ல என அக் குழு கூறியது. மீண்டும் ஒரு வெற்றி. 49 சதவீத அந்நிய முதலீடு கனவு தற்காலிகமாக கலைந்தது. அமெரிக்க நிறுவனமான ஏ.ஐ.ஜி, ஆஸ்திரேலிய நிறுவனமான ஏ.எம்.பி போன்றவை இந்திய இன்சூரன்ஸ் இணை வினைகளில் இருந்து வெளியேறின. காத்திருக்காமல் கம்பி நீட்டியவர்கள் இவர்கள்!
இன்னும் ஐந்தாண்டுகள் கழித்து 2014 ல் மோடி வந்தார். மீண்டும் 49 சதவீத முதலீடு மசோதா. அதில் ஒரு சூட்சுமத்தை சேர்த்து கொண்டு வந்தார்கள். ஒவ்வொரு தடவை அந்நிய முதலீடு உயர்வுக்கும் ஏன் நாடாளுமன்ற த்திற்கு வர வேண்டும்? அரசு நினைக்கும் போது உயர்த்திக் கொள்ளலாம் என ஒரு வரியை அதில் சேர்த்தார்கள். அவர்களால் 49 சதவீத அந்நிய முதலீடு மசோதாவை நிறைவேற்ற முடிந்தாலும் இந்த வரியை மசோதாவில் இருந்து வெளியே எடுக்க வேண்டி வந்தது. 49 சதவீதத்தை அந்நிய முதலீட்டிற்கு பெரும் எதிர்ப்பு இருந்ததால் “இந்தியர் கட்டுப்பாட்டில்” நிறுவனங்கள் இருக்கும் என்ற வரியை சேர்க்க வேண்டியிருந்தது. இப்படி ஓர் அரசின் முன்மொழிவு, சட்ட வரைவு வரிக்கு வரி விவாதிக்கப்படு வதற்கு மக்கள் கருத்து திரட்டப்பட்டதே காரணம். இது உலகமய எதிர்ப்பு இயக்கத்திற்கு சிறந்த முன்னுதாரணம்.
மீண்டும் வருகிறார்கள்
இப்படி 25 ஆண்டு காலம் ஓடியுள்ளன. பொது இன்சூரன்ஸ் துறையில் பங்கு விற்பனையை துவக்கியுள்ளார்கள். மறு காப்பீட்டு அரசு நிறுவனமான இந்திய பொது இன்சூரன்ஸ் கழகம் (GIC Re) மற்றும் நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் கம்பெனி ஆகியன பங்கு விற்பனைக்கு ஆளாகியுள்ளன. எல்.ஐ.சி 100 சதவீத அரசு பங்குகளோடு ஒரு செங்கல் கூட உருவப்படாமல் இருக்கிறது. இது கண்களை உறுத்தாமல் இருக்குமா? எல்.ஐ.சியின் வைர விழா நிகழ்ச்சியில் 2016 ஆம் ஆண்டு மும்பையில் பங்கேற்ற அன்றைய நிதியமைச்சர் அருண்ஜெட்லி எல்.ஐ.சி பங்கு சந்தைக்கு சென்றிருந்தால் அதிகமான மதிப்பு மிக்க நிறுவனமாக திகழ்ந்திருக்கும் என்று கூறி அரசின் எண்ணத்தை வெளிப்படுத்தினார். அதுவே இப்போது வணிக இதழ்களின் ஆசையாக வெளிப்பட்டுள்ளது. 1,05,000 கோடி ரூபாய் பங்கு விற்பனை இலக்கு போட்டிருக்கிற நிர்மலா சீதாராமன் அதற்கு எங்கே போவார்? அதுதான் எல்.ஐ.சி நோக்கி கவனம் திரும்பியுள்ளது.
எந்தெந்த வாதங்கள் எல்.ஐ.சி தனியார் மயத்திற்கு எதிராக 1990 களில் முன் வைக்கப்பட்டதோ அவை அத்தனையும் இப்போதும் பொருத்தமானவை. இன்னும் சொல்லப் போனால் அதிகம் பொருத்தமானவை.
* 20 ஆண்டுகளாக களத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள் சாதாரண மக்களுக்கான இன்சூரன்ஸ் பரவலை செய்யவில்லை.
* இன்றும் ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு எல்.ஐ.சியின் நிதியாதாரங்களே பெரும் பங்களிப்பாக உள்ளன. ரயில்வே 1,50,000 கோடிகள் வேண்டுமென்றவுடன் ஐந்தாண்டு களில் ரூ. 30000 கோடி வீதம் தருவதாக எல்.ஐ.சி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்துபோட்டது. நெடுஞ்சாலை திட்டங்களுக்கு நிதி என்றாலும் நம்பகமான ஊற்று எல்.ஐ.சிதான். முதல் ஐந்தாண்டு திட்டத்திற்கு (1956- 62) ரூ.184 கோடிகள் கொடுத்த எல்.ஐ.சி 12வது ஐந்தாண்டு திட்டத்திற்கு கொடுத்த தொகை ரூ.14,23,055 கோடிகள். 13வது ஐந்தாண்டு திட்டத்தின் முதல் இரண்டு ஆண்டுகளிலேயே ரூ.7,01,483 கோடிகள். ஆண்டு சராசரி 3 லட்சம் கோடிகளாக உயர்ந்துள்ளது. அந்நிய முதலீடுகளை விட உள் நாட்டு சேமிப்புகளே ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு பக்க விளைவுகளும் இல்லாத அருமருந்து என்பதை எல்.ஐ.சி நிரூபித்துள்ளது.
* ஒரு புறம் எல்.ஐ.சியில் தன் பிடியை தளர்த்த விரும்புகிற அரசாங்கம் இன்னொரு புறம் தான் தத்தளிக்கிற இடங்களில் எல்.ஐ.சியின் உதவிக் கரங்களைப் பற்றியே கரையேறி வருகிறது. அரசின் மின்சாரக் கனவான “உஜ்வால் டிஸ்காம் அஸ்யூரன்ஸ் யோஜனாவுக்கு” நிதி தந்தது யார்? என்.டி.பி.சி, ஓ.என்.ஜி.சி, செயில், கோல் இந்தியா, பெல், எச்.ஏ.எல், ஐ.ஓ சி... என வரிசையாக அரசின் பங்கு விற்பனை முயற்சிகளில் விலை சரிந்து அலாரம் அடித்த போதெல்லாம் ஓடிப் போய் உதவியது யார்? (2014-18 க்கு இடைப்பட்ட காலத்தில் மோடி அரசின் பங்கு விற்பனைக்கு எல்.ஐ.சி மட்டுமே உதவியிருப்பது 48000 கோடிகள்). ஐ.டி.பி.ஐ சிக்கலுக்கு ஆளான போது அதை வாங்க இன்னொரு வங்கி கிடைக்காத போது அதைக் காப்பாற்ற உதவியது யார்?
தங்க வாத்து
எல்.ஐ.சி பங்கு சந்தைக்கு வந்தால் ரிலையன்ஸ், டி.சி.எஸ் நிறுவனங்களை விட அதிக மதிப்பு மிக்க சரக்காக இருக்கும் என்பதுதான் மூலதனத்தின் நாக்குகளில் உமிழ் நீர் சுரப்பதற்கு காரணம். அரசின் 5 கோடி மூலதனத்தோடு 1956ல் துவக்கப்பட்ட நிறுவனம் 2018 ல் ஈட்டிய உபரி மட்டும் ரூ. 48436 கோடிகள். அதன் சொத்து மதிப்பு 31.11 லட்சம் கோடிகள். மெகா விருந்துதான் அவர்களுக்கு.... இருந்தாலும் லாப வெறி பன்னாட்டு மூலதனத்தை, இந்திய பெரும் தொழிலகங்களை உந்தித் தள்ளுகிறது. “100 சதவீத லாபம் கிடைக்குமென்றால் மூலதனம் எந்த சட்டங்களையும் உடைத்து நொறுக்கும்” என்றார் காரல் மார்க்ஸ். அப்படியொரு காமதேனுவாக திகழ்கிற எல்.ஐ.சியை விட்டு வைப்பார்களா? முதலில் குறி வைத்து முடியாமல் போனவர்கள் கடைசியாய் மீண்டும் வருகிறார்கள்.
இவ்வளவு பங்களிப்பு தருகிற நிறுவனத்தை அரசின் பிடியில் இருந்து விடுவிப்பது சரியா? என்ன செய்வது! தங்க வாத்தை அறுப்பவர்கள் எப்போதுமே யோசிப்பதில்லை.
கட்டுரையாளர்: தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர்.