பேச்சுவார்த்தையே தீர்வைத் தரும்!
பெங்களூரு, ஜூன் 19 - சீனாவுடனான எல்லைப் பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்பட வேண்டும் என்று கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவருமான எச்.டி. குமாரசாமி கூறியுள்ளார். பெங்களூருவின் புறநகரான தேவனஹள்ளி அருகே காரஹள்ளியில் நடைபெற்ற விழா ஒன்றில், இதுதொடர்பாக குமாரசாமி மேலும் பேசியிருப்பதாவது: சீன ராணுவத்தினரின் தாக்குதலில் நமது ராணுவ வீரர்கள் 20 பேர் உயிர்த்தியாகம் செய்துள்ளனர்.
தேவகவுடா பிரதமராக இருந்தபோது, சீனா - இந்தியா இடையே 35 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்த பிரச்சனையை தீர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சீனப் பிரதமர் இந்தியாவுக்கு வந்து, பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அமைதிக்கான தீர்வு எட்டப்பட்டது. தமிழ்நாட்டை சேர்ந்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் எழுதிய புத்தகத்தில், சீனா உடனான எல்லை பிரச்சனையை தீர்க்க தேவகவுடா எடுத்த முயற்சி குறித்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது, நாடு கொரோனா நெருக்கடியில் சிக்கியுள்ளது. மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். பொருளாதாரம் சீரழிந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் அண்டை நாடுகளுடன் பரஸ்பர நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். இது போரில் ஈடுபட வேண்டிய நேரம் அல்ல. மக்கள் உணவுக்கே கஷ்டப்படும்போது, போர் நடந்தால், மக்களின் நிலை என்ன ஆகும்? நாட்டுக்கு ஆபத்து வருகிறபோது, நாம் போராட வேண்டும். ஆனால் பேச்சுவார்த்தை மூலமே பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும். இவ்வாறு குமாரசாமி கூறியுள்ளார்.