ஆசிரியர் பயிற்சி பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வேலைக்காக கார்த்திருப்போருக்கு எதிராக தமிழக பள்ளிக் கல்வித்துறை கொண்டு வந்திருக்கும் முப்பது பக்கம் கொண்ட அரசாணை தமிழக அரசால் வெளியிடப்பட்டு அதன் விளக்கமும் அரசிதழில் வெளியிடப் பட்டுள்ளது.மறைந்த முதலமைச்சர்கள் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் கல்வித் துறைக்கு இருந்த முக்கியத்துவம் அறிந்து பாதுகாத்து வந்தார்கள்.இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள், உடற் கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள், தகுதித்தேர்வின் மூலமாக நேரடியாக நியமனம் செய்யப்படும்.
அப்போது பொதுப் பிரிவினருக்கு வயது வரம்பு 40 ஆகவும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்பட்ட வகுப்பினர், பிற்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்), விதவை, பட்டியல் இனமாகிய பழங்குடியினர் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு 45 வயது தளர்வு செய்யப்பட்டிருக்கிறது .தற்போது ஆசிரியர்கள் வேலை வாய்ப்பிற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டா லும் அந்த ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி யன்று 40 அல்லது 45 வயது நிறைவு பெற்ற வர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டது.
கனவாகும் ஆசிரியர் பணி!
தற்போது 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி முடித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார்கள். ஆசிரியர் தகுதித் தேர்வு பெற்றவர்கள் 7 ஆண்டுகளாகியும் தமிழக பள்ளிக் கல்வித் துறையால் வேலை வாய்ப்பு அளிக்கப் படவில்லை.ஏழு ஆண்டுகள் முடிவுற்றதால் அவர்கள் மீண்டும் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து வருகிறார்.வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படவில்லை அவர்கள் 40 வயதை கடந்து விட்டார்கள். அமைச்சரின் இந்த அறிவிப்பால் வேலை வாய்ப்பு கனவாகவே போய்விட்டால் எதிர்காலம் என்னவாகும்!கடந்த கால ஆட்சிகளில் வேலைவாய்ப்பக பதிவு முன்னுரிமைப்படி ஆசிரியர்களுக்கு நியமன வாய்ப்பு அளித்தபோது 57 வயதில் ஆசிரியர் பணிக்கு வந்தவர்கள், பேராசிரியர்கள் பணிக்கு வந்தவர்கள் இருந்தார்கள். 50 வயதில் வேலைக்கு வந்தவர்களும் இருந்தார்கள். 45 வயதில் வேலைக்கு வந்தவர்களும் இருந்தார்கள். ஆசிரியர்களுக்கு நியமனம் வயது வரம்பு என்பது எந்த ஆட்சி காலத்தில் இல்லாமல் இருந்து வந்தது.
உள்நோக்கம்...
ஆனால், எடப்பாடி பழனிச்சாமி காலத்தில் வெளி வந்துள்ள அரசாணை எண்: 12 பள்ளிக் கல்வித்துறை நாள் 30.1.2020 ன்படி ஆசிரியர் வேலை வாய்ப்பு என்பது முற்றிலும் உள் நோக் கத்துடன் தான் நிராகரிக்கப்பட்டுள்ளது.
முரண்பாடுகளின் மொத்த உருவம்
லட்சக்கணக்கானவர்களின் ஆசிரியர் பணி கனவை கலைக்கும் இந்த அறிவிப்பு மிகவும் அநீதியானது.தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பெரும்பான்மை யான மாநிலங்களில் வயது வரம்பு குறைக்கப் படாத ஒரே பணி ஆசிரியர் பணி மட்டும்தான். ஒருவர் ஓராண்டு பணி நிறைவு செய்யும் தகுதியை பெற்றிருக்க வேண்டும் என்பதுதான் கடந்த 30 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரே நிபந்தனையாகும்.அதன்படி ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற ஒருவர் அவர் 57 வயதில் கூட பணியில் சேர முடியும். தமிழ்நாட்டில் ஓய்வு பெறும் வயது 59 என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர் பணியில் சேருவதற்கான வயது 58 ஆக உயர்த்தப்பட்டு இருக்க வேண்டும். மாறாக 40 குறைக்கப்பட்டிருப்பது ஏற்க முடியாது.
மத்திய- மாநில அரசுகள் சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் பங்கேற்பதற்கான வயது வரம்பு எதுவும் நிர்ணயிக்கப் படவில்லை.ஒருவர் 55 வயதிலும் கூட ஆசிரியர் தகுதி தேர்வு எழுதலாம். ஆனால், அதில் அவர் வெற்றி பெற்றாலும்கூட ஆசிரியராக முடியாது என்பது முரண்பாடு களில் குற்றமல்லவா?தமிழ்நாட்டில் 2013 ஆம் ஆண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வில் சுமார் 80 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக தமிழகத்தில் ஆசிரியர் பணி நியமனம் நடைபெறாது நிலையில் அவர்கள் பணியில் சேர முடியவில்லை அதற்கு அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது.இப்போது அவர்கள் மீண்டும் தகுதித் தேர்வு எழுத ஆசிரியர் பணிக்கு தகுதி பெற முடியும் என்று அரசு அறிவித்து விட்டது.பெரும்பான்மையாக 40 வயதை கடந்தவர்களில் மீண்டும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் கூட ஆசிரியர் பணி செய்ய முடியாது. எந்த தவறும் செய்யாத நிலையில் கொள்கை முடிவு என்ற பெயரில் அவர்களை தண்டிப்பது எவ்வகையில் நியாயம்?
சமூக நீதிக்கு எதிரானது...
தமிழகத்தில் அரசு பள்ளியில் 7500 இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட 12000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித் துள்ளார்.அதன்படி அடுத்த சில ஆண்டுகளுக்கு ஆசிரியர்களின் நிலையில் இப்போது 35 வயதை கடந்த எவருக்கும் ஆசிரியர் பணி கிடைக்காது.ஆண்டுதோறும் தொடர்ச்சியாக ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில் ஆசிரியர் பணி நியமனத்திற்கு உச்சவரம்பு நிர்ணயம் செய்வது சமூக நீதிக்கு எதிரான செயலாகும்.வருங்காலத்தில் வேலைவாய்ப்புக்காக தகுதித்தேர்வு எழுதி காத்திருக்கும் இளைஞர்களுக்கும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அரசாணையை தமிழக அரசும் முதலமைச்சரும் கல்வித் துறை அமைச்சரும் மறு பரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும்.
=====அ.சங்கர்===
பொதுச்செயலாளர், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம்.