கொச்சி: சார்ட்டட் விமானங்களில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் நாடு திரும்ப நிபந்தனைகள் விதிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதாக கேரள உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதனால்தான் விமானங்களுக்கு மாநில அரசின் தடையில்லா சான்று தேவைப்படுகிறது எனவும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
கேரளத்திலிருந்து சென்று வெளிநாடுகளில் வாழும் சுமார் 5 லட்சம் பேர் கேரளத்திற்கு திரும்பி வர பதிவு செய்துள்ளனர். அவர்கள் கடந்த ஒருமாத காலமாக வந்தே பாரத் விமானங்களில் நாடு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் விமானத்தில் ஏறும்போது கோவிட் பரிசோதனை ஏற்கனவே செய்ததற்கான சான்றிதழ் அளிக்க வேண்டும் என கேரள அரசு கேட்டுக்கொண்டது.
அரசின் இந்த முடிவுக்கு எதிராக பத்தனம்திட்டயைச் சேர்ந்த ரெஜி தாழமண் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். வெள்ளியன்று இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை திங்களன்று தெரிவிக்குமாறு நீதிமன்றம் கேட்டிருந்தது. அதன்படி மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில், மாநில அரசுக்கு நிபந்தனை விதிக்கும் அதிகாரம் உள்ளதால்தான் தடையில்லா சான்று கோருவதாக மத்திய அரசு தெளிவு படுத்தியுள்ளது.