தஞ்சாவூர், மே 21- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரம் செருவாவிடுதி, காலகம், குறிச்சி, பின்னவாசல் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி புதன்கிழமை நடைபெற்றது. இதனை வட்டார மருத்துவ அலுவலர் வி.சௌந்தர்ராஜன் சொர்ணக்காடு, சித்தாதிக்காடு, ஆதனூர் ஆகிய இடங்களில் ஆய்வு செய்தார். நார்மலான கர்ப்பிணிகளுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், ரத்த சோகை உள்ளிட்ட பாதிப்படைய கூடுதல் கவனிப்பு தேவைப்படும், கர்ப்பிணிகளை சீமாங் சிறப்பு பிரிவு, பட்டுக் கோட்டை, தஞ்சாவூர் அரசு மருத்துவமனைகளுக்கும் பிரசவ சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும் என செவிலியர்களிடம் அறிவுறுத்தினார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.சந்திர சேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.