tamilnadu

விரைவில் திருவாரூர்-காரைக்குடி பிரிவு அகல ரயில்பாதை  துவக்கம்


பட்டுக்கோட்டை – காரைக்குடி அகல ரயில் பாதை வேலைகள் ஏற்கனவே முடிவடைந்து விட்டன. திருவாரூர் பட்டுக்கோட்டை ரயில் பாதை கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. இ.தன் சோதனை ஓட்ட ஆய்வினை தென்னக ரயில்வேயின் துணை பொது மேலாளர் ஏற்கனவே முடித்த நிலையில் பெங்களுர் தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் பாதுகாப்பு ஆய்விற்காக சேவையின் துவக்கம் காத்திருப்பில் உள்ளது. பாதுகாப்பு ஆணையரின் ஆய்வு இம்மாதம் நடைபெற்று விடும் என உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கூறுகின்றன. . இந்த ரயில் பாதை பாலங்கள் ரயில் நிலையங்களின் ஆய்வுகள் முடிந்த பின் சான்றிதழ் கிடைத்தவுடன் நிச்சயம் ஏப்ரல் மாத இறுதிக்குள் திருவாரூர் காரைக்குடி பிரிவு பயணிகள் ரயில் போக்குவரத்து முழுமையாக இயங்கத் துவங்கும் என தெரிகிறது. அப்போது எர்ணாகுளம் வேளாங்கண்ணி விரைவு ரயில் வண்டி எண்06015 மற்றும் வேளாங்கண்ணி எர்ணாகுளம் விரைவு ரயில் வண்டி எண் 06016-உம் திருச்சி செல்வதற்கு பதிலாக காரைக்குடி பட்டுக்கோட்டை திருத்துறைபூண்டி தடத்தில் திருப்பிவிடப்பட்டு வாரம் இருநாட்கள் நிரந்தர சேவையாக இயக்கப்படும் என்றும் இதற்கான முன்மொழிவு ரயில்வே வாரியத்திற்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படியிருந்தாலும் ஏப்ரல் இறுதிக்குள் வரலாற்று சிறப்பு வாய்ந்த திருவாரூர் காரைக்குடி ரயில் சேவை துவக்கப்பட்டு விடும் எனவும் இந்த மார்க்கத்தில் எர்ணாகுளம் வரை செல்லும் அழகிய மலை வளைவு ரயில் பயணங்கள் இரு மாநில மக்களை மகிழ்விக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடற்கரை நகரமான முத்துப்பேட்டை நகரம் திருவாரூர் மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தலமாகவும் மாற பிரகாசமாக வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. . நாகூர், வேளாங்கண்ணி, முத்துப்பேட்டை, சபரிமலை தலங்களை இணைக்கும் மத நல்லணக்க மக்கள் ரயில் தடமாகவும் இதுமாறும் என்பதும் நிச்சயமே.

-நீடா சுப்பையா 

;