tamilnadu

img

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் ஆறுதல்

தஞ்சாவூர், ஜூன் 5 -தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கல்யாணபுரம் 1-ம் சேத்தி சின்னக்கண்டியூரில், இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார். இங்கு கடந்த திங்கட்கிழமை அன்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 20 குடிசை வீடுகளில் தீ பரவி சேதமடைந்தது. உடனடியாக அங்கு சென்ற மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தினார். இந்நிலையில் செவ்வாயன்று அமைச்சர் இரா.துரைக்கண்னு, மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை ஆகியோர் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். தீ விபத்தால் வீடுகள் சேதமடைந்த 20 குடும்பங்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் பணம் மற்றும் ரூ. 2 ஆயிரத்து 500 மதிப்பிலான வீட்டு உபயோகப் பாத்திரங்களை  அமைச்சர் இரா.துரைக்கண்ணு தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.  மேலும் தீ விபத்தால் அரசு ஆவணங்களை இழந்தவர்களுக்கு சிறப்பு முகாம் நடத்தி நகல் ஆவணங்கள் வழங்கிடவும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.  தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், முன்னாள் மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், முன்னாள் திருவையாறு ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் இளங்கோவன் மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் உடனிருந்தனர்.