தஞ்சாவூர், செப்.22- தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் தெற்கு ஒன்றியம், இராயமுண்டான்பட்டியில் மக்கள் தலைவர் தியாகி என்.வெங்கடாசலம் 42-ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இலவச பொது மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூர் எம்.ஆர்.மருத்துவமனை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்திய மருத்துவ முகாமில் தஞ்சை மருத்துவர் ராதிகா மைக்கேல் தலைமையிலான சிறப்பு மருத்துவக் குழுவினர், பொதுமக்களை பரிசோதனை செய்து, இலவச மருந்து, மாத்திரைகளை வழங்கினர். இதில் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் லெ.முருகன், மாநில துணைத் தலைவர் முனைவர் வெ சுகுமாரன் ஆகியோர் செய்திருந்தனர்.