தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே மருங்குளம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் 10 ஆயிரம் மூட்டைகள் நெல் தேக்கமடைந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில், குறுவை நெல் அறுவடை ஏறத்தாழநிறைவடைந்துள்ள நிலையில், அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய விவசாயிகள் தினமும் நெல் கொள்முதல் நிலையங்களில் இரவு பகலாக காத்திருக்கின்றனர்.தஞ்சாவூர் மாவட்டத்தில், கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக தொடர்ந்து மழை பெய்துவருவதால் நெல் மூட்டைகள் மழைநீரில் நனைந்து ஈரப்பதம் அதிகமாகிறது. இதனால் நெல்லை மறுபடியும் வெயிலில் உலர்த்தி ஈரப்பதத்தை குறைத்து, மிஷினில்தூசி இல்லாமல் தூற்றி விற்பனை செய்ய கால தாமதம் ஆகிறது. இதனால் ஒவ்வொரு கொள்முதல்நிலையங்களிலும் நாளொன்றுக்கு500 மூட்டைக்கு மேல் கொள்முதல்செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், தஞ்சாவூர் அருகே மருங்குளம், கொல்லங்கரை, கா.கோவிலூர், தென்னமநாடு, சேதுராயன்குடிக்காடு உள்ளிட்ட பல கொள்முதல் நிலையங்களில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் வாரக்கணக்கில் தேங்கியுள்ளன. பகல் நேரங்களில் நெல்மணிகளை வெயிலில் உலர்த்தி மீண்டும் இரவு நேரத்தில் நெல் குவியல்கள் மீது படுதாவை மூடினாலும் பெய்யும் மழை நீரால் நெல் நனைந்து முளைத்து விடுகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
20 நாட்களாக...
இதுகுறித்து மானாவாரி பகுதி விவசாயிகள் சங்க செயலாளர் வேங்கராயன்குடிக்காடு து.வைத்திலிங்கம் கூறியதாவது: எங்களது பகுதியில் பம்பு செட் மூலம் சாகுபடி செய்த நெல்லை மருங்குளம், கொல்லங்கரை கொள்முதல் நிலையங்களில் விற்பனைக்காக கொட்டி வைத்துள் ளோம். 20 நாட்களாக நெல்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 500 மூட்டைக்கும் கீழே தான் கொள்முதல் செய்யப்படுகிறது. பிடித்துள்ள மூட்டைகளை கொள்முதல் நிலையத்திலிருந்து எடுத்து செல்லாததால் பணியாளர்கள் கொள்முதல் செய்ய தயங்குகின்றனர். பிடித்து வைத்துள்ள நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வருவதால் பணியாளர்கள் அச்சப்படுகின்றனர். இதனால் கொள்முதல் நிலையங்களில் மூட்டைகள் அதி
கம் தேங்கியுள்ளது. மருங்குளம் கொள்முதல் நிலையத்தில் நெல்கள் கொட்டக் கூட இடமில்லாத வகையில் சுமார் 10 ஆயிரம் மூட்டை நெல்கள் தேங்கியுள்ளது என்றார்.
இதுகுறித்து கொள்முதல் பணியாளர்கள் கூறுகையில்: மழைதினமும் பெய்கிறது, இதனால் ஈரப்பதம் அதிகமாக காணப்படு கிறது. எனவே நெல்களை வெயிலில் உலர்த்தி 17 சதவீதம் ஈரப்பதம்இருந்தால் தான் கொள்முதல் செய்கிறோம். இதில் கூடுதலாககொள்முதல் செய்தால் அதனால் ஏற்படும் இழப்புகளைபணியாளர்கள் தான் பொறுப் பேற்க வேண்டியிருப்பதால் அதனை தவிர்ப்பதால் காலதாமதம் ஆகிறது.அதே நேரத்தில் பிடித்து வைக்கப்பட்ட நெல்மூட்டைகள் கொள்முதல் நிலையத்திலிருந்து சேமிப்புக் கிடங்குக்கு எடுத்துச் செல்ல லாரிக்கு (வாடகையை நிர்வாகம் தருகிறது) மாமூல் 2,500 ரூபாய் கேட்கின்றனர். இந்தமாமூல் பிரச்சனைக்கு நிர்வாகம் முற்றுப்புள்ளி வைத்தால் தான் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் குறையும் என்றனர். தொடர்ந்து திங்கள்கிழமை மாலையும் பாப்பாநாடு, ஒரத்தநாடு, தென்னமநாடு, உள்ளூர், சூரக்கோட்டை, மடிகை பகுதியில் மழைபெய்து வருவதால் விவசாயிகள் நெல்லைக் காப்பாற்ற தடுமாறி வருகின்றனர்.