பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஆசிப் அலியின் இரண்டு வயது மகள் நூர் பாத்திமா நான்காம் நிலை புற்று நோயால் கடந்த ஒருவருடமாக அவதிப்பட்டு வந்தார். அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் நோயின் தன்மை நாளுக்கு நாள் முற்றியதால் சிகிச்சைப் பலனின்றி நூர் பாத்திமா திங்களன்று மரணமடைந்தார். ஒரு மாதத்துக்கு முன்பு உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட போது அந்த பட்டியலில் ஆசிப் அலி பெயர் இல்லை.இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இரு அரை சதங்கள் அடித்ததால், திங்களன்று அறிவிக்கப்பட்ட இரண்டாவது அணி பட்டியலில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆசிப் அலிக்கு வாய்ப்பளித்தது. அதே திங்களன்று மகளின் மரணம் நிகழ்ந்ததால் ஒரே நாளில் இன்பம், துக்கம் என இரண்டு நிகழ்வுகளை எதிர்கொண்டு துயரத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கும் ஆசிப் அலிக்கு பாகிஸ்தான் வீரர்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.