திருவனந்தபுரம், ஜுலை 27- பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளத்தின் புனரமைப்பு பணிகளுக்கு உதவ குடும்பஸ்ரீ யின் 9 ஆயிரம் பேர் கொண்ட தொழிலாளர் படை பயிற்சி முடித்துள்ளது. இவர்கள் அனைவரும் பன்னோக்கு நடவடிக்கைகளுக்கான பயிற்சி பெற்றவர்களாவர். பிளம்பிங் மின்சார பணிகளுக்கு இவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டால் போதும் உடனே வீடுகளுக்கு வந்துவிடுவார்கள். வீடுகளுக்கு வாடகைதாரர்களை தொடர்பு கொள்ளவும் இவர்கள் உதவுகிறார்கள். அனைத்து ஊராட்சிகளிலும் பன்னோக்கு குழு அமைக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக 500 ஊராட்சிகளி லும் மாநகர வார்டுகளிலும் இந்த குழு அமைக்கப்படும். பயிற்சி முடித்தவர்கள் வெள்ளியன்று தலைநகர் திருவனந்தபுரத்தில் ஒன்று திரண்டு அவர்களது அனுவபங்களை பகிர்ந்து கொண்டனர். உள்ளாட்சிகளின் கூடுதல் முதன்மை செயலாளர் டி.கே.ஜோஸ் குடும்பஸ்ரீ மேலாண்மை இயக்குநர் எஸ்.ஹரி கிஷோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெருவெள்ளத்திற்கு பிறகு கேரள வாழ்வாதார திட்டத்தில் பயிற்சி அளிப்பதற்கு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பத்து துறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதன்படி பகல்நேர பராமரிப்பு (டே கேர்),பிளம்பிங், டேட்டா என்ட்றி, மின் பணி, சலவை, வீட்டுப்பணி, ஹவுஸ் கீப்பிங், வணிகம், மின்சாதன பழுது நீக்கம், வாளாண்மை ஆகியவை அந்த துறைகள். இவற்றில் விருப்பமுள்ள அரை லட்சம் பேரை உட்படுத்தி வாழ்வாதார திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக 9 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் இவர்கள் பணியாற்றுவார்கள். தேவையானவர்கள் எப்போது அழைத்தாலும் இவர்களது சேவை கிடைக்கும். விருப்பம் உள்ளவர்கள் சொந்தமாக கடைகள் வைக்கலாம். இவர்கள் இருசக்கர வாகனம் வாங்கவும் தளவாடப் பெட்டி வாங்கவும் கடன் வழங்கப்படும் என மேலாண்மை இயக்குநர் எஸ்.ஹரிகிஷோர் கூறினார்.