சேலம், ஆக.9- கெங்கவல்லி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், வீட்டுமனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி தாலுகாவிற்குட்பட்ட தம்மம்பட்டி, கடம்பூர், மண்மலை, செந்தாரப்பட்டி ஆகிய பகுதியைச் சேர்ந்த மக்கள் வசிப்பதற்கு வீடு இல்லை. வீட்டுமனை கேட்டு கடந்த எட்டு ஆண்டுகளாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மனு கொடுத்து அப்பகுதி பொதுமக்கள் ஓய்ந்து போகினர். இந்நிலையில், வீட்டுமனை கேட்டு கெங்கவல்லி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் இன்று (ஆக.9) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தாலுகாச் செயலாளர் பி.தமிழ்மணி தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.குணசேகரன், ஏ.முருகேசன் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், மனுக்களை பெற்றுக்கொண்டு, பேசுகையில், ஆக.14 ஆம் தேதிக்குள் மேற்கண்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி உண்மையான பயனாளிகளுக்கு பட்டாவும், வீட்டுமனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அப்போது, ஆக.25 ஆம் தேதிக்குள் மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில், ஆக.29 ஆம் தேதியன்று ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் நடைபெறும், என மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.