மாணவிக்கு பாலியல்
தொல்லை: இளைஞர் கைது
மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞர் கைது சென்னை, மார்ச் 4- சென்னையில் வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டார். மேற்கு சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோ.கார்த்திக் (35). இவர், அந்த பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவி கடந்த திங்கட்கிழமை வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்துக் கொண்டு, அத்துமீறி அந்த வீட்டுக்குள் நுழைந்தார். மேலும் வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். இதைப் பார்த்த அந்த மாணவி சத்தமிட்டார். உடனே அப் பகுதி மக்கள், திரண்டு வந்து கார்த்திக்கை பிடித்து, சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது தொடர்பாக அந்த மாணவியின் பெற்றோர், சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர், கார்த்திக் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகள் விலை சரிவு
பூந்தமல்லி, மார்ச் 4- கோயம்பேடு மார்க்கெட்டுக்கு திங்களன்று 800 வாகனங்களில் 9000 டன் காய்கறிகள் வந்து குவிந்துள்ளதால் அனைத்து காய்கறிகளின் விலை குறைந்து காணப்பட்டது. அதன்படி, ஒரு கிலோ வெங்காயம், பீன்ஸ், வெண்டைக்காய், பாகற்காய் ரூ.30க்கும், சின்ன வெங்காயம் ரூ.40க்கும் தக்காளி ரூ.15க்கும், உருளை கிழங்கு, சுரைக்காய், நூக்கல் ஆகியவை ரூ.20க்கும் விற்பனை செய்யப்பட்டது. கேரட், பீர்க்கங்காய் 35க்கும் பீட்ரூட், வெள்ளரிக்காய், பச்சை மிளகாய், அவரைக்காய், கோவைக்காய் 25 க்கும் சவ்சவ் ரூ.10க்கும், முட்டைகோஸ் ரூ.5க்கும், காராமணி மற்றும் பட்டாணி, எலுமிச்சை ரூ.20க்கும், சேனைக் கிழங்கு, முருங்கைக்காய் ரூ.60க்கும் விற்பனையானது. பூண்டு ஒரு கிலோ ரூ.150ல் இருந்து குறைந்து ரூ.90க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல், ஒரு கிலோ இஞ்சி ரூ.300ல் இருந்து ரூ.60ஆக குறைந்துள்ளது.
விமான நிலையத்திற்கு வெடிகுண்டு என மின்னஞ்சல்
சென்னை,மார்ச் 4- சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு செவ்வாயன்று வந்த வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலால் பரபரப்பு நிலவியது. சென்னை விமான நிலையத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவன அலுவலகத்துக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. வெளிநாட்டில் இருந்து அனிமியா பேகம் என்ற பெயரில் இந்த மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள், அதிரடி படையினர், மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனைகளில் ஈடுபட்டனர். சென்னையில் இருந்து அந்தமான், தில்லி, மும்பை உள்ளிட்ட சில இடங்களுக்கு புறப்பட இருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் இது வழக்கமாக வரும் வெடிகுண்டு புரளி தான் என்று தெரிய வந்தது. இது குறித்து சென்னை விமான நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.