tamilnadu

img

அமர்பிரசாத் ரெட்டியை தமிழ்நாட்டு காவல்துறை கைது செய்யாதா? – கே.கனகராஜ்

சமீபத்தில் யூடியூபர் மதன் ரவிச்சந்திரன் வெளியிட்ட வீடியோக்கள் ஒரு பகுதி பார்வையாளர்களிடமும் சில அரசியல் கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளிடமும் சில எதிர்வினைகளை உருவாக்கியிருக்கிறது.

ஆனால், சிலர் பணத்திற்காகவும் பரிசுகளுக்காகவும் விலை போய்விட்டார்கள் என்பதைத் தாண்டி இதற்குப் பின்னே உள்ள ஆழமான சதி மற்றும் ஊடக சூழலை கூலிக்கான அடியாள் கூட்டமாக மாற்றும் தந்திரம் ஆகியவை பற்றி ஒரு சிலரைத் தவிர பிரதானமான எந்த தமிழ் பத்திரிக்கைகளும் தொலைக்காட்சிகளும் அல்லது தனிநபர்களும் பெரிதாக எழுதியதாகவோ, பேசியதாகவோ தெரியவில்லை.

இந்நிலையில் காவல்துறையினருக்கும் அரசியல் கட்சியினருக்கும் ஊடகத்துறையினருக்கும் கீழ்க்கண்ட சில கேள்விகளை முன்வைக்க விரும்புகிறேன்.

1. லஞ்சம் அல்லது கூலி அல்லது பரிசுப் பொருட்கள் வாங்கியவர்களைப் பற்றி ஒரு விவாதம் நடக்கிறது. ஆனால், இதற்கு ஏற்பாடு செய்தவர்கள் யார்? இதற்காக பணம் கொடுத்தவர்கள் யார்? பணம் கொடுத்தது ஊழல் கணக்கில் வராதா? இந்தப் பணம் யாரால் செலவழிக்கப்பட்டது. அந்தப் பணத்திற்கு கணக்கு வைக்கப்பட்டிருக்கிறதா? இல்லை, கருப்புப் பணம் என்றால் அது யாருடையது? இதைக் கண்டறிய வேண்டியது புலனாய்வுத்துறையின் பணி இல்லையா? இதைக் காவல்துறை கண்டு கொள்ளாதா?

2. இந்த விவாதங்களின் போது பாஜகவின் அமர்பிரசாத் ரெட்டி “அமைதியாக இருக்கணும். நாம வெளிய வந்தா ஒரு சம்பவம் செய்யணும். அதை எல்லோரும் பேசணும். மேலிடத்திற்கு தெரியணும்”ன்னு பேசியிருக்கிறார். அவர் சம்பவம் செய்து மேலிடத்தை காக்காய் பிடித்தாலும் கொக்கு பிடித்தாலும் நமக்குக் கவலையில்லை. ஆனால், அதற்காக அவர் சம்பவம் செய்ய பெரியாரின் சிலையை உடைப்பேன் என்று சொல்கிறார். வழக்கமாக சிலையை உடைப்பது, மசூதியை உடைப்பது, கோவில்களை இடிப்பது, வீடுகளை தகர்ப்பது என்பது இவர்களுடைய அரசியல் நடவடிக்கையின் ஒரு பகுதிதான். ஆனால், வெளிப்படையாக தன் கட்சித் தலைவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக பெரியார் சிலையை உடைப்பேன் என்று சொல்வது குற்றச்சதி என்கிற கணக்கில் வராதா? ஒருவேளை இதுவரை பெரியார் சிலைகளுக்கு அவமரியாதை செய்ததும், பேரறிஞர் அண்ணா மற்றும் எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு அவமரியாதை செய்ததும் இந்த நபர்தானா? அல்லது இவரது தூண்டுதல்களால் வேறு யாரேனும் செய்ததா?

3. மதன் ரவிச்சந்திரன் முன்பு ஒருமுறை ஒரு வீடியோவை வெளியிட்டபிறகு அதைத் தொடர்ந்து இன்னும் சில வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாகவும் சொல்லியிருந்தார். அவை எல்லாம் பாஜகவுக்கள் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பானது என்று குறிப்பிட்டதாக நினைவு. அது உண்மை எனில் அந்த வீடியோக்கள் என்னாயிற்று? அவரே அவற்றையெல்லாம் வெளியிடவில்லை என்றால் அது மிரட்டி பணம் பறிப்பதற்காக சொன்ன பொய்யா? அவரிடம் உண்மையில் அப்படி வீடியோக்கள் இருந்தும் அதை யாருடைய மிரட்டலுக்கோ அல்லது யாருடைய ஆசை வார்த்தைகளுக்கோ பயந்து மறைக்கப்பட்டது என்றால் பாலியல் துன்புறுத்தல் குற்றத்தை மறைத்ததாகாதா? அப்படி மறைக்கத் தூண்டியவர்கள் மீதும் மறைத்தவர் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாதா?

4. பாஜக தலைவர் ஒருவர் தன் கட்சி அல்லது கட்சிக்கு வெளியே உள்ள அரசியல் எதிரிகளை வீழ்த்துவதற்காக திட்டமிட்டு சிலர் மீது பழிசுமத்தி தலைகுனிய வைப்பதற்கும், ஒரு சிலரிடம் இல்லாத குணங்களை 'புகுத்தி' அவர்களை ஊதிப் பெரிதாக்கி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக இவர்களை எல்லாம் பயன்படுத்துவதாகச் சொல்வது மக்களை ஏமாற்றுவதாகாதா?

5. தொலைக்காட்சி விவாதங்களில் அரசியல் விமர்சகர், வலதுசாரி ஆதரவாளர், பட்டயக் கணக்காளர் என்று பல்வேறு அடையாளங்களில் பங்கு பெறுவோரின் அரசியல் நிலைபாட்டை முன்வைத்து அவர்கள் தங்களின் அரசியல் சாய்மானத்தை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னபோது அதை தொலைக்காட்சியினரும் ஏற்றுக் கொண்டதில்லை. மேற்கண்ட அடையாளங்களில் வருபவர்களும் ஏற்றுக் கொண்டதில்லை. நடுநிலை முகமூடியோடு தங்கக்காசு வாங்கிக் கொண்டு மக்களை முட்டாளாக்கும் முயற்சியில் ஈடுபட்டது மோசடி இல்லையா?

6. இதற்கு முன்பும் கூட ராடியா டேப்ஸ், நாரதா டேப்ஸ் போன்ற பெயரில் இத்தகைய ஸ்டிங் ஆப்பரேசன்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், தற்போதைய ஸ்டிங் ஆப்பரேசனைப் பொறுத்தமட்டில் மக்களிடம் பத்திரிக்கையாளர்கள் என்று வேசமிட்டுக் கொண்டு கொள்ளைப்புறத்தில் காசுக்காக ஒரு நபருக்கு அல்லது கட்சிக்கு ஆதரவாகவோ அல்லது சில நபர்களை கட்டம் கட்டி அடிப்பதற்கோ பணம் வாங்குகிறார்கள் என்றால் அவர்கள் செய்தது பித்தலாட்டம் இல்லையா? குடும்பம், கடன், குழந்தை, இஎம்ஐ இருக்கிறது என்பதற்காக எது வேண்டுமானாலும் செய்யலாம் என்பது தார்மீக நெறிமுறைகளுக்கு உட்பட்டதா?

7. யூடியூப் எல்லாம் ஊடகங்களா? என்று விமர்சித்துவிட்டு அதே யூடியூபர்களை புறக்கடை வழியாக தனது அடியாட்களாக பயன்படுத்தியிருப்பது அப்பட்டமான பச்சோந்தித்தனம் இல்லையா?

மொத்தத்தில் இந்த ஸ்டிங் ஆப்பரேசன் 2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அகில இந்திய அளவில் பாஜகவும் ஆர்எஸ்எஸ்சும் சங்பரிவார் அமைப்புகளும் குஜராத் மாடல் என ஊதிப்பெருக்கி எப்படி எல்லாம் மக்களை ஏமாற்ற ஊடகங்களை தங்கள் ஊதுகுழலாக பயன்படுத்தினார்களோ அதே முறையை தமிழ்நாட்டு ஊடகச் சூழலில் பாஜக திணித்திருக்கிறது.

பாஜக தேசத்திற்கும் இந்தியர்களுக்கும் கேடு மட்டுமல்ல, மிகவும் குறிப்பாக ஊடகங்களை மிரட்டி, பணம் கொடுத்து அவற்றின் நம்பகத்தன்மையை இழக்க வைத்து அதன் மூலம் நேர்மையானவர்களையும் நம்ப முடியாமல் செய்கிற அட்டூழியத்தைச் செய்திருக்கிறது. எனவே, இந்த ஸ்டிங் ஆப்பரேசனை முன்வைத்து சம்மந்தப்பட்ட அனைவரையும் விசாரணை வலையத்திற்குள் கொண்டு வந்து பொருத்தமான முறையில் விசாரணை நடத்தி தவறிழைத்தோருக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.

மெயின்ஸ்ட்ரீம் மீடியாக்கள் இதை அறுவருத்து ஒதுக்காமல் இதில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கவனத்தில் கொண்டு இந்த நாற்றமெடுத்த விசயங்கள் குறித்து மக்களிடம் உண்மையைக் கொண்டு சேர்க்க வேண்டும்.

கே.கனகராஜ், சிபிஎம்(மாநிலச்செயற்குழு உறுப்பினர்) முகநூல் பதிவு