tamilnadu

சென்னை , செங்குன்றம் முக்கிய செய்திகள்

கஞ்சா விற்ற 7 பேர் கைது

போரூர், நவ.17- சென்னை எம்.ஜி.ஆர். நகர் அசோக்நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து காவல்துறையிர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் எம்.ஜி.ஆர். நகர் அடுத்த நெசப்பாக்கம் மதுபானக் கடை அருகே சனிக்கிழமையன்று இரவு 2 வாலிபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட  கவுதமன், தர்ஷன் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது வடபழனி காவாங்கரை பகுதியைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி ராஜேஸ்வரி என்பவரிடம் இருந்து கஞ்சா வாங்கி வந்ததாக தெரிவித்தனர்.  இதைத்தொடர்ந்து ராஜேஸ்வரி வீட்டிற்கு சென்று காவல்துறையினர் சோதனை நடத்தினர். அங்கு ஒரு கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ராஜேஸ்வரியுடன் சேர்ந்து கஞ்சா விற்பனை செய்து வந்த நாகம்மாள், லட்சுமிகுமார் உள்ளிட்ட 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். ராஜேஸ்வரி அளித்த தகவலின்படி திருவொற்றியூர் கோதண்டம் என்பவரை கைது செய்தனர். அவரது வீட்டில் 10 கிலோ கஞ்சா மற்றும் ரூ.65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான கோதண்டம் ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சா வாங்கி வந்து சென்னை நகர் முழுவதும் சில்லரை வியாபாரிகளுக்கு கஞ்சாவை விநியோகம் செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

வாலிபர் தற்கொலை

செங்குன்றம்,நவ.17- செங்குன்றம் நாரவாளி குப்பம் திருவள்ளூவர் தெருவைச் சேர்ந்தவர் சாகுல் அமீது (35). இவர் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றார். இருந்தும் நோய் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த இவர். சனிக்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்த போது,கத்தியால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.  இதுபற்றி தகவல் அறிந்ததும் அக்கம் பக்கத்தினர் செங்குன்றம் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். உடனே காவலர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


அரசு மேடையை தேர்தல் மேடையாக்கிய  அமைச்சர் சீனிவாசன்

திண்டுக்கல், நவ.17- அரசு கூட்டுறவு வார விழா மேடையை தேர்தல் மேடை யாக்கி வாக்குச் சேகரித்தார் வனத்துறை அமைச்சர் சீனி வாசன்.  திண்டுக்கல் குள்ளனம்பட்டியில் சனிக்கிழமை 66-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடை பெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பாக செய லாற்றிய கூட்டுறவு சங்கங்களுக்கு விருதுகள், கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது: கூட்டுறவு விழா மூலம் உங்களிடம் நான் பணிவோடு கேட்டுக்கொள்வதெல்லாம் உள்ளாட்சித் தேர்தல் நடை பெறுகிற இந்த ஆட்சியில் அரசாங்கத்திற்கு உபயோகமான வர்கள் வெற்றி பெற்றால் கிராமப்பகுதிகளில், நகர் பகுதி களில், பேரூராட்சி பகுதிகளில் அனைத்து உதவியும் செய்து நல்ல ஆட்சி நடத்துவோம் என்று நம்பிக்கை வையுங்கள் என்றார். 


10 ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்த வத்தலக்குண்டு சங்கரன் பூங்கா திறப்பு

வத்தலக்குண்டு, நவ.17- திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் கடந்த பத்தாண்டுகளாக பூட்டிக்கிடந்த சங்கரன் பூங்காவை நவீ னப்படுத்தி பேரூராட்சி நிர்வாகம் திறந்துள்ளது. நீரூற்று நவீன விளையாட்டு சாதனங்கள் பூங்காவில் அமைக்கப் பட்டுள்ளது.  பூங்காவை ஒருவழியாகத் திறந்த வத்தலக்குண்டு பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்பிரமணியன் உள் ளிட்ட அலுவலர்களை மக்கள் பாராட்டினர். பூங்காவை தொடர்ந்து பராமரித்துப் பாதுகாக்க வேண்டும்.  பூங்கா பகுதி இருள்சூழ்ந்திருப்பதால் இரவு நேரங்களில் அப்பகுதியை சிலர் கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். இதைத் தவிர்க்க மின்விளக்குகள் அமைக்க வேண்டு மென்பதே வத்தலக்குண்டு மக்களின் கோரிக்கையாகும். 

பாதியில் நிறுத்தப்பட்ட  ரயில்வே சுரங்கப்பாதை

வேடசந்தூர், நவ.17-   திண்டுக்கல் வேடசந்தூர் அருகே உள்ள மல்வார்பட்டி, மாரம்பாடி, கோட்டைமந்தை, சொட்டமாயனூர் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் நல்லமனார்கோட்டை வழியாக திண்டுக்கல், எரியோட்டிற்கு தினந்தோறும் மக்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் சென்று வருவார்கள். இவர்கள் நல்லமனார்கோட்டைக்கு முன்பாக திண்டுக்கல் - கரூர் செல்லும் ஆளில்லாத ரயில்வே பாதையைக் கடந்து செல்வார்கள். இந்த ரயில்வே பாதையைக் கடக்கும்போது விபத்துக்கள் ஏற்பட்டு பலர் இறந்துள்ளனர். இதனால் ரயில்வே நிர்வாகம் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்கு பின்பு மற்ற ஊர்களில் தொடங்கப்பட்ட பணிகள் முழுமையடைந்து பயன்பாட்டிற்கு வந்துவிட்டன.  ஆனால் நல்லமனார்கோட்டை ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் பணி இரண்டு வருடங்களாக ஏனோ-தானோ வென நடைபெறுகிறது. பாதி கட்டப்பட்ட நிலையில் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.  திறந்த நிலையில் இரண்டுபக்கம் சுவர் மட்டுமே கட்டப் பட்டுள்ளதால் மழை காலங்களில் மழைநீர் சுரங்கப்பாதை யில் தேங்கி நிற்கிறது. மக்கள் வாகனங்களில் கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. ரயில்வே நிர்வாகம் நல்லமார்கோட்டை ரயில்வே சுரங்கப் பாதை அமைக்கும் பணியை விரைவா முடித்து பயன் பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேருந்தை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

பெரியபாளையம், நவ.17- வெங்கல் அருகே உள்ள வதட்டூர் கிராமத்திற்கு வதட்டூர்-ஆவடி வரையில் ஒரு மாநகரப் பேருந்தும், கோயம்பேட்டில் இருந்து வதட்டூர் வரை ஒரு பேருந்தும் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆவடி வரை இயக்கப்பட்டு வந்த பேருந்தை நிறுத்திவிட்டு கோயம்பேட்டுக்கு இரண்டு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. கடந்த சில வாரமாக இரண்டு பேருந்தில் ஒரு பேருந்தை நிரந்தரமாக நிறுத்தி விட்டனர். செயல்பாட்டில் இருந்த அந்த ஒரு பேருந்தும் தற்போது  குறிப்பிட்ட நேரத்தில் இயக்கவில்லை என கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் பள்ளி-கல்லூரிக்கு செல்வோரும்,   வேலை செய்வோரும் மிகவும் சிரமத்துக்கு உள்ளா னார்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி களுக்கு புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் ஞாயிறன்று(நவ.17)  வதட்டூர் வந்த அரசுப் பேருந்தை சிறைபிடித்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் வெங்கல் காவல்துறையினர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்க ளிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக போக்கு வரத்துதுறை அதிகாரிகள் வந்து உறுதி கூறினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினர்.