சென்னை:
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு நீதிக்கு தலைக்குனிவை ஏற்படுத்திய தீர்ப்பு என்று தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு விமர்சித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது, மாநிலப் பொதுச்செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி அயோத்தியில் பாபர் மசூதி திட்டமிட்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இந்த சட்டவிரோத செயலுக்கு எதிரான வழக்கில் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் செப்டம்பர் 30 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது. பாபர் மசூதி இடிப்பதற்கு தலைமை தாங்கிய பாஜக தலைவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த தீர்ப்பானது இந்திய நீதித்துறை மீதான நம்பிக்கையை இழக்கச் செய்திருக்கிறது என தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
வெறியூட்டப்பட்டு திரட்டப்பட்ட சங் பரிவாரக் கும்பலால் பாபர் மசூதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டு 28 ஆண்டுகள் கழித்து அது குறித்த வழக்கில் தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. பட்டப்பகலில் ஊடகங்கள் முன்னிலையில் அன்றைய உச்சநீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட உத்தரவாதத்தையும் மீறி உச்சநீதிமன்ற பார்வையாளரின் முன்னிலையில் இந்த அக்கிரமம் நிகழ்த்தப்பட்டது. அன்றைய மாநில ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி செய்த கடும் குற்றச் செயலுக்கான தீர்ப்பை இன்றைய ஆட்சிஅதிகாரத்தைப் பயன்படுத்தி பெற்றுள்ளனர்.
ஏற்கனவே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வு பெறும் நாளில் பாபர் மசூதியை இடித்தவர்களுக்கே அந்த இடம் உரிமையானது என்ற தீர்ப்பை பெற்றுக் கொண்டனர். தற்போது சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓய்வு பெறும் நாளில் குற்றவாளிகள்அனைவரையும் விடுதலை செய்யும் தீர்ப்பை பெற்றுள்ளனர். கூட்டுச் சதியின் மூலம்இக்குற்றச் செயல் நடைபெறவில்லை என்ற தீர்ப்பே ஆட்சியாளர்கள், சிபிஐ, சிபிஐ நீதிமன்றம் ஆகியவற்றின் கூட்டுச்சதி மூலமாகவே பெறப்பட்டது என்பதில் எள்ளளவு சந்தேகத்துக்கும் இடமில்லை. இத்தீர்ப்பு இந்திய நீதிபரிபாலனத்துக்கு தலைக்குனிவை ஏற்படுத்தும் தீர்ப்பு மட்டுமல்ல, மதச்சார்பற்ற அரசியல் சட்டத்தின் படியான சட்டத்தின் நிர்வாகத்துக்கு வைக்கப்பட்ட வேட்டும் ஆகும். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு தனது கண்டனத்தை பதிவு செய்கிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.