tamilnadu

img

சுகாதாரமற்ற குடிநீர்: நாகமலை மக்களின் அவல நிலை

நாகமலை மக்களின் அவல நிலை

கிருஷ்ணகிரி, டிச.13- சூளகிரி வட்டத்தில் பேருந்து நிலையத்திலிருந்து 12 கிலோ மீட்ட தூரத்தில் மலைகளுக்கிடையில் உள்ளது நாகமலை கிராமம். இங்கு 25 ஆண்டுகளாக 50 இருளர் குடும்பங்கள் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். சிறிய அளவில் விவசாயம் மற்றும் ஆடு மாடுகள் மேய்த்தல் கூலி வேலை, சூளகிரி பகுதியில் வீட்டு வேலைகள் செய்து வருகின்றனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நாகமலையில் சாலை ஓரம் சட்டமன்ற உறுப்பினர் நிதியின் மூலம் ஆழ் துளை கிணறு அமைக்கப்பட்டு  அடி பம்ப் போடப்பட்டது சில ஆண்டுகளிலேயே பழுதானது.  இது குறித்து பல முறை புகார் அளிக்கப்பட்டும் கைப்பம்பு சீர்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் குடிக்கவும் உபயோகத்திற்கும் தண்ணீருக்கு தவித்து வருகின்றனர்.  இந்நிலையில் குடியிருப்புக்கு 500 மீட்டர் தூரத்தில் தாழ்வான பகுதியில் குழி தோண்டி அதில் ஊரும் சேரும் சகதியுமான தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் ஒரு குடம் தண்ணீர் எடுக்க 5 நிமிடங்களாகிறது. இது குறித்து பல முறை மனுக்கள் கொடுக்கப்பபட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மலைவாழ், பழங்குடி, தலித், இருளர் மக்கள் வீடுகளுக்கு பட்டா கேட்டு மாபெரும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், முன்பு நடந்த பேச்சுவார்த்தையின் போதும் நாகமலை மக்களின் குடிநீர் பிரச்சனை குறித்துபேசப்பட்டது. உடனடியாக குடிநீர் அடிபம்ப்பை சீர்படுத்தித் தருவதாக உறுதியளித்தனர். அதன் பிறகும் சீர்படுத்தாததால் மீண்டும் நவம்பர் 6 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போதும் உடனே நடவடிக்கை எடுப்பதாய் வட்ட வருவாய் அலுவலரும்  பொறியாளரும் உறுதியளித்தனர்.  தட்டிக் கழிக்க மட்டுமே உறுதியளிக்கும் சூளகிரி வட்ட அரசு அலுவலர்களால் 50 இருளர் குடும்பத்தினரும் தண்ணீருக்கு வழியில்லாமல் தத்தளிக்கின்றனர். இது கண்டனத்திற்குறியது. இனியும் இழுத்தடிக்காமல் நாகமலையில் பழுதான அடிபம்பை உடனடியாக சீர்படுத்தித் தர வேண்டும். தவறும் பட்சத்தில் இருளர் மக்கள் மறியலில் ஈடுபட உள்ளனர் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் முனியப்பா, மாவட்டச் செயலாளர் பிரகாஷ் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.