ராயபுரம், ஜூன் 30- தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க அரசுகளுக்கு அக்கறை இல்லை என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். சென்னை ராயபுரத்தில் நடைபெற்ற திமுக மருத்துவமுகாமை தொடங்கி வைத்து பேசுகையில் இதனை அவர் தெரிவித்தார். திமுக ஆட்சியின் போது மக்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார்.ஆனால் மக்கள் மீது அக்கறை இல்லாத அ.தி.மு.க. அரசு அடிப்படை வசதி கூடசெய்து தர வில்லை. எங்கு பார்த்தாலும் குடிநீருக்காக மக்கள் தவித்து வருகிறார்கள். குடிநீர் பிரச்சனையில் எந்த முன்னேற்பாடும் செய்யவில்லை. அதற்கு மாறாக தி.மு.க. அரசியல் செய்வதாக கூறுகிறார்கள்.தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட பிறகு குடிநீர் பிரச்சனை இருப்பதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டார். தமிழகத்தில் நிலவும் குடிநீர் பஞ்சத்தை பார்த்து உலக நாடுகள் கவலை கொள்கின்றன. ஆனால் குடிநீர் பிரச்சனையை தீர்க்க மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை.கலைஞர் ஆட்சியில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள்கொண்டு வரப்பட்டன. ஆனால் இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் பணம் சம்பாதிப்பதில் மட்டுமே குறிக்கோளாக உள்ளனர். அவர்களிடம் மக்களுக்கு சேவை செய்யும் எண்ணம் இல்லை என்றார்.