tamilnadu

img

நியாயமற்ற தேர்வால் பறிபோகும் ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவு

சென்னை, ஜூன் 22 - நீட் (NEET) தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தி வருகிறது. இந்த  தேர்வில், நடைபெற்ற முறைகேடுகள் அடுத்தடுத்து அம்பலமாகி நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல நூறு கோடி ரூபாய் அளவிற்கு பணம் புழங்கியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

எனவே, இந்த தேர்வை ரத்து செய்ய  வலியுறுத்தி நாடு முழுவதும் மாண வர்கள் போராடி வருகின்றனர். உச்ச நீதி மன்றமும், இப்பிரச்சனையில் ஒன்றிய  அரசுக்கும், தேசிய தேர்வு முகமைக்கும்  நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது.

இந்த நிலையில் உதவி பேராசிரி யர் நியமனத்திற்காக நடத்தப்பட்ட யுஜிசி-நெட் தேர்விலும் முறைகேடு புகார் எழுந்து, அந்தத் தேர்வை ஒன்றிய  அரசு ரத்து செய்தது. இதனை தொட ர்ந்து நடைபெற இருந்த சிஎஸ்ஐஆர்- நெட் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி  தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், இந்த முறை கேடுகளைக் குறிப்பிட்டு, “என்டிஏ மூல மான தேர்வு முறையை ரத்து செய்ய  வேண்டும், ஒன்றியக் கல்வி அமைச்சர்  பதவி விலக வேண்டும். நெட் மற்றும்  நீட் தேர்வுகளை எழுதிய மாணவர் களுக்கு ஒன்றிய அரசு இழப்பீடு வழங்க  வேண்டும். பிஎச்டி சேர்க்கைக்கு நெட்  மதிப்பெண்ணை கட்டாயமாக்கியதை திரும்பப் பெற வேண்டும், மாணவர்  சேர்க்கைக்கான மையப்படுத்தப்பட்ட அனைத்து விதமான நுழைவு தேர்வு களையும் திரும்ப பெற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் சூழலில், நீட் தேர்வு முறை கேடுகள் குறித்து புலன் விசாரணை நடத்த வேண்டும், தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து முழுமையாக விலக்கு அளிக்க வேண்டும், இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநில அரசே நடத்திக் கொள்ள அனு மதிக்க வேண்டும், நீட் தேர்வை முழு மையாக ரத்து செய்ய வேண்டும் என  வலியுறுத்தி சனிக்கிழமையன்று (ஜூன்  22) மாநிலம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இதில், சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி. ராமகிருஷ்ணன் பங்கேற்று உரை யாற்றினார். வேளச்சேரி பகுதிச் செய லாளர் எஸ். முகமது ரஃபி தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத் தில் தென்சென்னை மாவட்டச் செயலா ளர் ஆர். வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் கே. வனஜகுமாரி, எஸ்.  குமார், சோழிங்கநல்லூர் பகுதிச் செய லாளர் பி. ஜெயவேல், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஆர். சுரேஷ் உள் ளிட்டோர் பேசினர்.

மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் புரசைவாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கண்டன உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் எம்எல்ஏ, திமுக  செய்தித் தொடர்பு இணைச் செயலா ளர் தமிழன் பிரசன்னா, திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் மதிவதனி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். முரளி, கே. முரு கன், வே. ஆறுமுகம், இ. சர்வேசன், எழும்பூர் பகுதிக்குழு உறுப்பினர் பி.கே.  மூர்த்தி உள்ளிட்டோர் பேசினர்.

தேர்வைக் கூட நடத்த துப்பில்லாத பாஜக அரசு! கே.பாலகிருஷ்ணன் காட்டம்

சென்னை, ஜூன் 22- தேர்வைக் கூட ஒழுங்காக நடத்துவதற்கு துப்பில்லாத  அரசாக, ஒன்றிய பாஜக அரசு உள்ளது என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.  பாலகிருஷ்ணன் சாடினார்.

புரவைவாக்கத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கே. பாலகிருஷ்ணன் மேலும் கூறியதாவது:

நாடு முழுவதும் நீட் தேர்வில் அனைத்து விதமான  முறைகேடுகளும் நடந்துள்ளது. நீட் தேர்வு தொடங்கி யது முதலே இதுபோன்ற முறைகேடுகள், பல கோடி ரூபாய்  அளவிற்கான ஊழல் முறைகேடுகள் நடந்து வருகின்றன.  இன்றைக்கு உச்ச நீதிமன்றமே தலையிட்டு, குறிப்பிட்ட சிலருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை நீக்கி யுள்ளது. பள்ளித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஒரு மாண வன் நீட் தேர்வில் 720 மதிப்பெண் வாங்கியுள்ளார். இது  எப்படி சாத்தியம்?

பல லட்சம் ரூபாய் கொடுத்து நீட் தேர்வில் 720 மதிப்  பெண் பெற்றுவிட்டால் எய்ம்ஸ் போன்ற உயர்ந்த கல்வி நிலையங்களில் கட்டணமின்றி படிக்க முடியும். தகுதியே இல்லாத மாணவர்கள் பணத்தை வைத்து இப்படி முறை கேடு செய்வதும், தகுதியுள்ள மாணவர்கள் பணமில்லாத தால் மருத்துவப் படிப்புக்கே செல்ல முடியாத நிலையும்  ஏற்படுகிறது.

நாடு முழுவதும் ஒரு லட்சம் மருத்துவ இடங்களே உள்ள நிலையில், 12 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் பணம் உள்ளவர்களுக்கே இடம் கிடைக்கும். மருத்துவக் கல்வி நிலையங்களை வர்த்தக நிறுவனங்க ளாக மாற்றி கொள்ளையடிக்கின்றனர். விரும்பாத மாநி லங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.

சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற நெட் தேர்வில்  முறைகேடு நடந்ததால் அதை ரத்து செய்துள்ளனர். தேர்வு நடத்த துப்பில்லாத அரசாக ஒன்றிய அரசு உள்ளது. இதனை கண்டித்து நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. தமிழ கத்தில் தொடங்கிய நீட் எதிர்ப்பு இயக்கம் நாடு முழுவதும்  எதிரொலிக்கிறது. இதற்கு மோடி அரசு அடிபணிந்தே ஆக வேண்டும். அடுத்தடுத்து நடைபெற உள்ள தேர்தல்  களில் இது பெரும்பிரச்சனையாக எழும். தமிழகத்திற்கு விதிவிலக்கு பெறும் வரை போராட்டம் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார்.