tamilnadu

img

எம்எல்ஏ-அமைச்சர் வாக்குவாதம்-தள்ளுமுள்ளு

வேலூர், நவ. 15- வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீர்வு மனுக்கள் பெறும் கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய   அணைக்கட்டு தொகுதியின் சட்டமன்ற திமுக உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், “தனது தொகுதியில் பெறப்படும் மனுக்கள் மீது அதிகாரிகள் அலட்சியம் காட்டியதாக குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய, அவர் தனது தொகுதியை சேர்ந்த  அம்பிகா என்ற பெண்ணை மேடைக்கு அழைத்தார். அவருக்கு விதவை பென்ஷன் வழங்குவதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை  எடுக்காமல் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்கள் என்று உள்ளூர் அமைச்சரான கே.சி. வீரமணியின் கவனத்துக்கொண்டு வந்தார். அதை பொறுத்துக் கொள்ளமுடியாத அமைச்சர் ஆவேசமடைந்தார். அருகில் அமர்ந்திருந்த மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளை செல்லமாக கடிந்துகொண்டார். இதனால் அமைச்சருக்கும் எம்எல்ஏவுக்கும் வார்த்தைபோர் மூண்டதால் எம்எல்ஏ பேசிக் கொண்டிருந்த ஒலிபெருக்கி அணைக்கப்பட்டது. இது மேலும் அவரை கோபப்படுத்தியதால் வாக்குவாதம் கடுமையானது. அப்போது மேடையில் இருந்த ஆளும் கட்சியை சேர்ந்த முருகேசன் என்பவர் மைக்கை கீழே தள்ளினார். மேடைக்கு கீழே அமர்ந்திருந்த இரு கட்சிகளையும் சார்ந்த  தொண்டர்கள் மேடைக்கு வந்து தகராறு செய்ததால் தள்ளு முள்ளு கை கலப்பாக மாறியது. யார் யார் அடிக்கிறார்கள் என்பதைக்கூட தெரிந்துகொள்ள முடியவில்லை. அதிகாரிகளும், பாதுகாப்பு பணிக்காக வந்திருந்த காவலர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக மேடை ஏறி இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர்.