tamilnadu

img

வேட்டைக்காரன் இன மக்கள் பழங்குடி பட்டியலில் சேர்க்க கோரிக்கை

திருவண்ணாமலை, ஜூன் 3-வேட்டைக்காரன் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநாட்டில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்றச் சங்கத்தின் முதல் மாவட்ட மாநாடு திருவண்ணாமலையில் நடைபெற்றது. சங்கத்தின் அமைப்பாளர் சி.ரவிச் சந்திரன் தலைமை வகித்தார். மத்தியக் குழு உறுப்பினர் ஏ.வி.சண்முகம் மாநாட்டை தொடக்கி வைத்துப் பேசினார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் இ.கெங்காதுரை, மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான பி.டில்லிபாபு ஆகியோர் உரையாற்றினர்.வேட்டைக்காரன் சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். வேட்டைக்காரன் மக்களிடையே பழங்குடியினர் ஆராய்ச்சி மைய நிர்வாகிகள் உடனடி கள ஆய்வு நடத்த வேண்டும். வேட்டைக்காரன் இன மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, தொகுப்பு வீடு, முதியோர் மற்றும் விதவை உதவித் தொகைகளை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆர்.சரவணன், மாவட்டச் செயலர் எம்.மாரிமுத்து, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.கே.வெங்கடேசன், செயலாளர் வி.சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, பெரியார் சிலை எதிரிலிருந்து ஊர்வலம் புறப்பட்டது.