tamilnadu

img

முற்போக்கு மாநிலம் கேரளாவுக்கு வந்துள்ளேன் வைக்கம் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்கும் முதல்வர் பெருமிதம்

சென்னை,டிச.11- “ தீண்டாமை இந்த நாட்டின் சாபக்கேடு” என்றார் அண்ணல் காந்தியடிகள். தீண்டா மைக் கொடுமையை ஒழித்திட கேரள மண்ணில் வைக்கம் நகரில் நடைபெற்று வெற்றிகண்ட இந்தியாவின் முதல் போராட்டம் வைக்கம் போராட்டம்!

தடை, அதை உடை போராட்டம்

“தொட்டால் தீட்டு” என்பார்கள். தொடாம லேயே, சிலரைக் கண்ணால் கண்டாலே தீட்டு என்ற வழக்கமும் ஒரு காலத்தில் இருந்துள் ளது. அதையெல்லாம் விட, கேரள மாநிலம் வைக்கம் நகரில் மகாதேவர் கோவில் இருக்கும் தெருவில் நடந்தாலே தீட்டாகி விடும்; ஆதலால், கோவிலைச் சுற்றியுள்ள  தெருக்களிலும், கோவிலுக்கு எதிரே உள்ள தெருவிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் முதலான சமுதாயத்தினர் நடந்து செல்லவே கூடாது என்னும் கொடிய தடை இருந்தது. அந்தத் தடையை உடைத்திட 1924-ஆம் ஆண்டில் நடைபெற்ற போராட்டம்தான் வைக்கம் போராட்டம்!

கடிதமும்-போராட்டமும்...

வைக்கம், கேரள மாநிலத்தின் அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தில் அடங்கி யிருந்த நகரமாகும். அந்நகரிலுள்ள மகா தேவர் கோவிலைச் சுற்றி அரசு அலுவலகங் கள், நீதிமன்றம் எல்லாம் இருந்தன. ஈழவர் சமுதாயத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மாத வன் என்பவர் தீண்டத்தகாதவர் என்பதால், அந்த நீதிமன்றத்திற்குள் நுழைய  முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டது. இதனை எதிர்த்து தான் வழக்கறிஞர் மாதவன், கேசவ மேனன் டி.கே.மாதவன், பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப் முதலான பலர் போராடி னார்கள். அப்படிப் போராட்டம் நடத்திய அனைவரையும் திருவாங்கூர் சமஸ்தான போலீசார் கைது செய்தனர். அதனால், போராட்டம் நின்றுவிடும் சூழ்நிலை உருவானது.

அப்போது இறுதியாக கைதாகிச் சிறை சென்ற பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப், கேசவ மேனன் ஆகியோர் கையெழுத்திட்டு; அப் போது, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவ ராக இருந்த தந்தை பெரியார் அவர்களுக்குக் கடிதம் எழுதி, தாங்கள்தான் வைக்கம் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தி வெற்றி தேடித் தேர வேண்டும் என்று வேண்டு கோள் வைத்தனர். அந்தக் கடிதம் கிடைத்த தும், 13.4.1924 அன்று வைக்கம் நகருக்கு வந்த தந்தை பெரியார் அவர்களால் போராட்டம் தீவிரம் அடைந்தது.

பெரியார் கைதும்-கடுங்காவல் தண்டனையும்

திருவாங்கூர் மகாராஜா ஏற்கனவே பலமுறை ஈரோடு நகருக்கு வந்து பெரி யார் இல்லத்தில் விருந்தினராகத் தங்கி யிருந்தவர். ஆதலால், தந்தை பெரியாரை தம் விருந்தினராக நடத்த விரும்பினார். அதைக் காவல் துறையினரும் மகாராஜா வின் அலுவலர்களும் பெரியாரிடம் தெரி வித்தனர். பெரியார், நான் அரச விருந்தாளி யாக இங்கு வரவில்லை என நயமாகக் கூறி மறுத்துவிட்டார். அதன் பின்னர் பெரி யாரின் போராட்டத்தில் மக்கள் திரண்டதைக் கண்டு பொறுக்க முடியாத நிலையில், திரு வாங்கூர் போலீசார் தந்தை பெரியாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். முதல் முறை 1 மாதமும், இரண்டாவது முறை 6 மாதமும் கடுங்காவல் தண்டனை வழங்கி பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார்.

வைக்கம் வீரரானார் பெரியார்

தந்தை பெரியார் கைதாகிச் சிறையில் இருந்தபோது, தந்தை பெரியாரின் துணை வியார் நாகம்மையார், தங்கை கண்ணம் மாள்  இருவரும் வைக்கம் வந்து, போராட்டக் களத்தில் இறங்கினர். வைக்கம் நகரைச் சுற்றியிருந்த கிராம மக்களும் திரண்டு தொடர்ந்து போராடியதால் திருவாங்கூர் சமஸ்தான அரசு பணிந்து, மகாதேவர் கோவில் தெருக்களில் ஈழவர் முதலான வகுப்பார் நடந்து செல்வதற்கு இருந்த தடையை நீக்கி, எல்லோரும் செல்லலாம் என்று ஆணைபிறப்பித்தது.

இப்படி, வைக்கம் போராட்டத்தை வெற்றிபெறச் செய்ததால் தந்தை பெரியாரை தமிழ்த் தென்றல் திரு.வி.க . “வைக்கம் வீரர்”எனப் பாராட்டி எழுதினார். 

வைக்கத்தில் பெரியார் நினைவகம் இன்று திறப்பு
 

வைக்கம் வீரர் பெரியார் நினைவாக, அந்நகரில் பெரியார் நினைவகமும், பெரி யார் நூலகமும் தமிழ்நாடு அரசால் கட்டப் பட்டுள்ளது. தந்தை பெரியார், வைக்கம் போராட்டத்தில் பங்கேற்ற நூற்றாண்டு நிறை வினைக் கொண்டாடுவதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைக்கம் நக ரில் உள்ள தந்தை பெரியார் நினைவகத்தை யும், நூலகத்தையும் புதுப்பித்திட 8 கோடியே 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி ஆணையிட்டார்.

அதன்படி, தமிழ்நாடு அரசின் பொதுப் பணித் துறையால் புதுப்பிக்கப்பட்ட தந்தை  பெரியார் நினைவகம் மற்றும் நூலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிச.12 அன்று காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார். 

இரு மாநில முதல்வர்கள் பங்கேற்பு

இந்த விழாவில் பங்கேற்பதற்காக முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் புதனன்று கேரளா சென்றுள்ளார். இந்த மாபெரும் விழாவிற்கு, கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜ யன் தலைமையேற்கிறார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி முன்னிலை வகிக் கிறார். தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் உட்பட கேரள அமைச்சர் களும், உயர் அதிகாரிகளும் பங்கேற்கிறார்  கள். இந்நிலையில், உடன் பிறப்புகளின் வர வேற்பு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது என சமூகவலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

அதில், “துடிப்பு மிக்க பண்பாடும் பரிசுத்தமான அழகும் முற்போக்குத்தன்மை யும் நிறைந்த கேரளாவுக்கு, வைக்கம் சத்தி யாகிரக போராட்டத்தின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தில் பங்கேற்க வந்தி ருக்கிறேன். இங்கு நான் வரும் ஒவ்வொரு முறையும், திராவிட சகோதரர்கள் அளிக்கும் வரவேற்பும் வெளிப்படுத்தும் விருந்தோம்பல் பண்பும் சொந்த வீட்டுக்கு வந்ததை போன்ற உணர்வை எனக்கு தருகிறது” என தெரிவித்துள்ளார்.

வைக்கம் வலிய காவலில் பெரியார் நினைவிடம் திறப்பு விழா முடிந்ததும், கடற்கரை மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கடற்கரையில் சுமார் 5,000 பேர் அமரும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. கேரள - தமிழக அரசுகள் இணைந்து நடத்தும் இந்த மாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என செய்தியாளர்கள் சந்திப்பில் கேரள-தமிழக அமைச்சர்கள் வி.என்.வாசவன், ஏ.வ.வேலு ஆகியோர் தெரிவித்தனர். கேரள அரசின் சார்பில் சத்தியாகிரக நூற்றாண்டு விழா மார்ச் மாதம் பிரமாண்டமாக நடத்தப்படும் என அமைச்சர் வி.என்.வாசவன் தெரிவித்தார். வைக்கம் சத்தியாகிரக நினைவிடம் அடுத்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என்றும், அரசு தலைமையில் பல்வேறு இடங்களில் சத்தியாகிரக நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.