tamilnadu

தமிழ் மக்களின் சுயாட்சி உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும்!

சென்னை, செப். 23 - இலங்கை தமிழ் மக்களின் சுயாட்சி உரிமைகள், இன, மொழி, சமத்துவம் ஆகியவற்றை உறுதிப்படுத்தி, இலங்கையில் சிறுபான்மை மக்கள் அனைவருக்கும் சம உரிமைகளை நிலைநாட்டும் அரசாக அனுர குமார திஸாநாயக்க அரசு செயல்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

முக்கியமான அரசியல் மாற்றம்!

இலங்கையில் ஜேவிபி தலைவரும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான அனுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்று ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளார். இலங்கை மக்கள் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக மேற்கொண்ட மாபெரும் மக்கள் போராட்டத்தின் விளைவாக, அரசியலில் முக்கியமான ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இலங்கை பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு, மக்களின் கல்வி, சுகாதாரம் குடியிருப்பு வசதிகளை மேம்படுத்தும் பல இடதுசாரி திட்டங்களை முன்வைத்து தேசிய மக்கள் சக்தி, அனுர குமார திஸாநாயக்க தலைமையில் தேர்தல் களத்தை சந்தித்தது. இந்நிலையில், இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஓர் இடதுசாரி வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த நிகழ்வாகும்.

சிறுபான்மையினர் சம உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்!

நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகள் மூலம் உலகை ஆட்டிப்படைத்து வரும் ஏகாதிபத்திய சக்திகளை எதிர்த்து, உழைப்பாளி மக்கள் அனுதினமும் போராடி வரும் சூழ்நிலையில், இலங்கையில் இடதுசாரிகள் வெற்றி பெற்றுள்ளது பாராட்டுக்குரியது. மகத்தான முறையில் வெற்றிபெற்றுள்ள அனுர குமார திஸாநாயக்க-வுக்கும், அவருக்கு வாக்களித்த இலங்கை வாக்காளப் பெருமக்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

இலங்கையின் இன்றைய சவால்களை எதிர்கொண்டு மக்கள் ஒற்றுமை, உழைக்கும் மக்களுக்கான நலன் காக்கும் நல்லாட்சியை நடத்திட அனுர குமார திஸாநாயக்க அரசு பாடுபடும் என்று நம்புகிறோம். அத்துடன் பறிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் சுயாட்சி உரிமைகள், இன, மொழி, சமத்துவம் ஆகியவற்றை உறுதிப்படுத்தி இலங்கையில் சிறுபான்மை மக்கள் அனைவருக்கும் சம உரிமைகளை நிலைநாட்டும் அரசாக அனுர குமார திஸாநாயக்க அரசு செயல்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுத்திடுக!

தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் தாக்கப்படும் நிலை நீடிக்கும் சூழலில் தமிழக மீனவர்களின் நலனுக்கு பாதிப்பு ஏதும் வராமல் உரிய நடவடிக்கையை புதிய அரசு மேற்கொள்ள வேண்டும் என விழைகின்றோம். 

இலங்கை அரசியல் வரலாற்றில் திருப்பு முனையாக நிகழ்ந்துள்ள மாற்றம் இலங்கையில் உள்நாட்டு அரசியலில் அமைதி, முன்னேற்றத்தை ஏற்படுத்தும்; இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நல்லுறவு வலுப்படுத்தப்படும் என்ற தமிழக மக்களின் விருப்பத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிரொலிப்பதோடு, அனுர குமார திஸாநாயக்க அரசு வெற்றிப்பயணத்தை தொடர வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.