தமிழக சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதிமுதல் மே 10 வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் 2022-23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் மார்ச் 18 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதன்தொடர்ச்சியாக மார்ச் 19 ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை, வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அதனைதொடர்ந்து மார்ச் 21 ஆம் தேதி சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. 3 நாட்கள் நடைபெற்ற விவாதம் 24 ஆம் தேதி நிறைவு பெற்றது. அதன்பிறகு சபாநாயகர் அப்பாவு பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.
இந்த நிலையில் தொடர்ந்து பட்ஜெட்டின் அடுத்த கூட்டத்தொடர், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கும் என்றும் மார்ச் 30 அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்றும் பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக வருகிற ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதிவரை நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.